பாஞ்சாகுளம் குழந்தையின் வலியை யாராவது உணர்ந்திருப்பார்களா?.. இதுதான் சனாதானம்.. வன்னியரசு
சென்னை: சத்துணவு சாப்பிட தட்டு கூட தரமாட்டார்கள் என பாஞ்சாகுளத்தில் உள்ள பட்டியலின மாணவர்கள் கூறும் இந்த சனாதன கொடுமையை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கு வேண்டும் என விசிக வன்னியரசு கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமம். இந்த கிராமத்தில் ஆதிதிராவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகிறார்கள்.
இந்த குழந்தைகள் தின்பண்டங்கள் வாங்கி உண்ணும் கடையில் தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்ட சம்பவம் நேற்றைய தினம் வெளிச்சத்திற்கு வந்தது. ஒரு பெட்டிக் கடையில் அந்த பட்டியலின மாணவர்கள் தின்பண்டங்களை கேட்கிறார்கள்.

கடைக்காரர் அட்டூழியம்
அதற்கு அந்த கடைக்காரர், உங்கள் தெருவில் உள்ளவர்களுக்கு தின்பண்டங்கள் எதுவும் கொடுக்கக் கூடாது, நீங்கள் இங்கே வராதீங்க, ஸ்கூலுக்கு போங்க என விரட்டுகிறார். ஒன்றுமே புரியாத அந்த சின்னஞ்சிறு குழந்தைகள் அதே இடத்தில் நிற்கிறார்கள், கோபமடைந்த கடைக்காரர் , ஊருக்கள் கட்டுப்பாடு போட்டிருக்காங்க, பொருள் கொடுக்க முடியாது என்கிறார்.

கட்டுப்பாடா அப்படினா
இந்த நிலையில் அந்த குழந்தைகள் கட்டுப்பாடா அப்படினா என கேட்கிறார்கள். இந்த வீடியோ வைரலாகி பார்ப்போர் நெஞ்சை துளைத்தெடுத்தது. பெரியாரின் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இது போன்ற சமூக அவலங்களை ஒழிக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டது.

தென்காசி போலீஸார்
இந்த நிலையில் இதுகுறித்து தென்காசி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் ஒரு பிரிவை சேர்ந்த ராமசந்திரமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டார். அது போல் பெட்டிக் கடைக்கு கோட்டாட்சியர் சுப்புலட்சுமி தலைமையிலான குழு சீல் வைத்தது. மேலும் கடையின் உரிமையாளர், அதாவது பட்டியலின குழந்தைகளை அவமானப்படுத்திய மகேஸ்வரனையும் போலீஸார் கைது செய்தனர்.

குழந்தைகள் படிக்கும் பள்ளி
இந்த நிலையில் குழந்தைகள் படிக்கும் அந்த பள்ளியிலும் ஜாதிய பாகுபாடு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தமக்கு நேர்வது என்னவென்றே தெரியாத பிஞ்சு குழந்தைகள் கூறுகையில் பள்ளியில் சத்துணவு சாப்பிட தட்டு தரமாட்டார்கள். சண்டை நடந்தால் விலக்கி விட மாட்டார்கள். வகுப்பில் பெஞ்சில் கூட எங்களை உட்கார கூடாது என்பார்கள்.

பெஞ்சில் உட்கார அனுமதி இல்லை
நாங்கள் கீழேதான் உட்கார வேண்டும் என தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த சிறார்கள் கூறுகிறார்கள். பள்ளியில் சமத்துவத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே இது போன்ற செயல்களை ஊக்குவிக்கிறார்கள் என்றால் என்னவென சொல்வது? இந்த நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

சனாதனம்
அவர் கூறுகையில் இந்த குழந்தையின் வலியை யாராவது உணர்ந்திருப்பார்களா? இது தான் சனாதனம். இந்த சனாதனத்தை அழித்தொழிக்கவே போராடிவருகிறோம். மாண்புமிகு முதல்வர் @CMOTamilnadu கல்வி நிலையங்களில் தலைவிரித்தாடும் இந்த சனாதனக்கொடுமையை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications