தெரியுமா சேதி.. வசந்தகுமார் கன்னியாகுமரியில் போட்டியிடலையாம்.. பொன்னார் தரப்பு நிம்மதி!
கன்னியாகுமரியில் வசந்தகுமார் போட்டியிட மாட்டார் என்றே கூறப்படுகிறது.
சென்னை: விஷயம் தெரியுமா... காங்கிரசின் எச்.வசந்தகுமார் கன்னியாகுமரியில் போட்டியிட போவதில்லை என்ற ஒரு தகவல் வந்துள்ளது!
வரும் எம்பி தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 4 தொகுதிகளை அக்கட்சிக்கு உறுதி செய்தது திமுக.
சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய 4 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது உறுதியானது. மிச்சம் உள்ள 5 தொகுதிகள் எவை என்பதற்கான பேச்சுவார்த்தை இனி நடைபெறும் என்றும் சொல்லப்பட்டது.
காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் 9 தொகுதிகளில்.. நான்கு இதுதானாம்!
பாஜக கோட்டை
கன்னியாகுமரியை பொறுத்தவரை பாஜகவின் கோட்டை.. பாஜகவின் மண்.. இப்படிதான் பெயரை தாங்கி நிற்கிறது. இந்த பெயருக்கு காரணகர்த்தா மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்தான். தொகுதியில் செல்வாக்குடன் கெத்தாக வலம் வருபவர்.
சரியான போட்டி
ஆனால் இந்த தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 5 பேர் இருக்கிறார்கள். இது வேறு எந்த கட்சிக்கும் கிடைக்காத அந்தஸ்து. இதை தவிர நாடார் இன ஓட்டுக்களும் அதிகம். இதையெல்லாம் வச்சு கூட்டி கழித்து பார்த்ததில் வசந்தகுமார் தான் காங்கிரஸ் வேட்பாளர் என ஓரளவு முடிவாகி இருந்தது. மேலும் பொன்.ராதாவுக்கு சரியான போட்டியாக இவர் மட்டுமே இருப்பார் என்று பேசப்பட்டது.
பசை உள்ளவர்
காங்கிரசை வைத்து மத்த வேட்பாளருக்குதான் பலம் என்றால், வசந்தகுமார் இருப்பதாலேயே காங்கிரசுக்கு பலம் என்ற பெயர் இருக்கிறது. காரணம் பசை உள்ள நபர்.. ஆனால் இப்போது வசந்தகுமார் அங்கு தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. வசந்தகுமார் ஏன் போட்டியிடவில்லை என்று விசாரித்தபோது சரிவர உறுதியான தகவல் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை.
ராபர்ட் க்ரூஸ்
ஆனால் வசந்தகுமார் ராஜ்யசபாவுக்கு பிளான் பண்ணுகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில், கடந்த 2-ம் தேதி காங்கிரஸ் தலைவராக அழகிரி நியமிக்கப்பட்டபோது கட்சியின் 4 செயல்தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டவர்தான் வசந்தகுமார். எனவே ராஜ்யசபா செல்ல வசந்தகுமார் முடிவெடுத்திருக்கலாம் என்றும் அதனாலேயே புது வேட்பாளர் ராபர்ட் க்ரூஸ் நிறுத்தப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.
நாடார் சமூகம்
புதுவரவு என்றாலும் ராபர்ட் க்ரூஸ் மட்டும் ஒன்றும் சளைத்தவர் இல்லையாம். இவர் ஒரு புது வரவுதான். ஆனால் கிறிஸ்தவர்... நாடார் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தொகுதிக்கு சாதகமான அம்சங்களே இவரிடம் உள்ளதால் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு டஃப கொடுப்பார் என்றே சொல்லப்படுகிறது. இருந்தாலும் வசந்தகுமார் போட்டி இல்லை என்றாகிவிட்டால் பொன்.ராதாகிருஷ்ணனுக்குதான் கொஞ்சம் நிம்மதி!