'வெறும் 100 நாட்களில் எண்ணற்ற சாதனை.. திமுக அரசு சமூக நீதிக்கான அரசு..' திருமாவளவன் பாராட்டு
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றி திமுக அரசு ஒரு சமூக நீதிக்கான அரசு என்பதை உறுதிப்படுத்தி இருப்பதாகவும் திமுக எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தனது 59வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றி திமுக அரசு ஒரு சமூக நீதிக்கான அரசு என்பதை உறுதிப்படுத்தி இருப்பதாக திருமாவளவன் குறிப்பிட்டார்.

சமூக நீதிக்கான சமூகங்களை ஒன்றிணைப்போம்
பெரியார் திடலில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்பி, "2019ஆம் ஆண்டு பிறந்த நாளில் பனை விதைகளைப் பாதுகாப்போம் என்ற கருப்பொருளைக் கொண்டு செயல்பட்டோம். அதேபோல இந்த ஆண்டு சமூக நீதிக்கான சமூகங்களை ஒன்றிணைப்போம் என்ற கருப்பொருளை வெகுமக்கள் இடையே கொண்டுபோய் சேர்க்க முடிவு எடுத்துள்ளோம். ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 17 வரை ஒரு மாதம் இது பற்றிய கருத்தரங்குகள், இணையவழி சொற்பொழிவுகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபடவுள்ளோம்.

திமுக அரசு சமூக நீதிக்கான அரசு
பெரியார் கண்ட கனவைக் கருணாநிதி சட்டமாக இயற்றினார். அதை இன்றைய முதலமைச்சர் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை இயற்றி திமுக அரசு ஒரு சமூக நீதிக்கான அரசு என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. திமுக எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உற்ற துணையாக இருக்கும்" என்றார்.

ஊழல் தடுக்கப்பட்டுள்ளது
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு எதிராகச் சிவாச்சாரியார்கள் கூறிய கருத்துக்குப் பதிலளித்த திருமாவளவன் எம்பி, "சட்ட அடிப்படையில் ஆகம விதிகளின்படி பயிற்சி பெற்று அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். சிவாச்சாரியார்கள் தொடர்ந்து அதே பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோல கூறி வருகிறார்கள். இதற்கு முன்னர் 6 அர்ச்சகர்களில் ஒருவர் அரசுப் பணியில் இருப்பவராகவும் மீதமுள்ள 5 பேர் அவர்கள் நியமிக்கும் ஆட்களை வைத்துக்கொண்டு ஊழல் செய்து வந்தார்கள். அதை முறியடிக்கும் அமைச்சரின் செயல் சனாதன சக்திகளுக்கு எரிச்சலைத் தருவதால் இது போன்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது" என்றார்.

100 நாட்களில் எண்ணற்ற சாதனைகள்
தொடர்ந்து திமுக ஆட்சி குறித்துப் பேசிய அவர், "திமுகவின் 100 நாள் ஆட்சி அனைத்து தரப்பு மக்களும் வெகுவாக பாராட்டக்கூடிய வகையில் நேர்மையான திறன் வாய்ந்த ஆட்சியாக உள்ளது. 100 நாட்களில் எண்ணற்ற பல சாதனைகளை எல்லாத் தரப்பு மக்களும் பயன்படக்கூடிய வகையில் செய்துள்ளனர். அதேபோல் வேளாண்மைக்கு எனத் தனி பட்ஜெட் அறிவித்திருப்பது விவசாயப் பெருங்குடி மக்களின் வரவேற்பை வெகுவாகப் பெற்று வருகிறது. கட்சி சார்பற்றவர்களைப் பொருளாதார நிபுணர்களாக நியமித்தது ஆலோசனைக் குழுவை அமைத்து அதன்படி இயங்கி வருவது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 100 நாள் ஆட்சியை வரவேற்கிறோம்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications