இன்னும் கூட இந்தியாவில்.. மனுதர்ம ஆட்சிதான் நடைபெறுகிறது! இதை பார்த்தால் புரியும்! திருமாவளவன் பரபர
சென்னை: சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விசிக தலைவர் தொல். திருமாவளவன் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
விசிக தலைவரும் சிதம்பரம் எம்பியுமான தொல். திருமாவளவனின் 60ஆவது பிறந்தநாளையொட்டி சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா நடைபெற்றது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்ற இந்த பரிசளிப்பு நிகழ்வில் திரையுலகில் இருந்து பலர் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

தொல். திருமாவளவன்
இந்த நிகழ்ச்சியில் பேசிய தொல். திருமாவளவன், "இந்தியாவின் 4 தூண்களும் சரி, நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாடுகளான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவமே ஆகியவையும் சரி இன்று கேள்விக்குறியாகி உள்ளது. அம்பேத்கரின் "கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்" என்ற வரிகள் மிக முக்கியமானவை. அதை "கற்பி, கலகம் செய், ஒன்று சேர்" என்று நான் மாற்றி உள்ளேன்.

தூய தமிழ்
சமூகத்தில் அனைவரிடமும் சமத்துவக் கருத்தைக் கற்பிக்க வேண்டும். அதேபோல நாம் அனைவருக்கும் கேள்வி எழுப்பும் துணிச்சலும் வேண்டும், இதுதான் மக்கள் எழுச்சிக்கு வழிவகை செய்யும். தமிழ் சொற்களை நாம் பேச வேண்டும். சாதம் என்பது வடமொழி... சோறு என்பதே தான் நல்ல தமிழ்ச்சொல்.. துய தமிழ் சொற்கள் வேண்டும் என்றால் குடிசை பகுதிகளுக்குத்தான் போக வேண்டும்.

சொற்கள்
சொல் என்றாலும் அது செயல் தான்.. வெறும் பேச்சு தான் என்று கருதிவிட முடியாது. சொற்களே மனிதர்களை இயக்குகிறது.. அவை தான் சாதனை படைக்கவும் காரணமாக அமைகிறது. சொற்கள் வலிமை மிக்கவை.. எனவே அவற்றை நாம் தேர்ந்தெடுத்து கவனத்துடன் கையாள வேண்டும். லீடர் என்றால் தலைவன் என்று அர்த்தம் இல்லை.. அனைவருக்கும் முன்னோடி, முன்னோக்கிச் செல்பவனே லீடர் ஆகும்.

சாதிய பிரச்சினை
மனிதநேயம் இல்லாத நபர்களிடம் சமத்துவத்தை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. பாசிசத்துக்கு எதிரானதே ஜனநாயகம்.. ஆதிக்கம், ஒடுக்குமுறை, சுரண்டல் ஆகியவை தான் மனிதக்குலத்தின் எதிரிகள்.. இந்தியாவில் வர்ணாசிரம தத்துவம் தான் சகோதரத்துவத்தைச் சிதைக்கிறது. இந்தியாவில் சாதிய பிரச்சினை தொடரவே செய்கிறது. சாதிய பிரச்சனை என்றால் அது தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களுக்கும் இடையேயான பிரச்னை இல்லை.

வெறுப்பு அரசியல்
அவ்வளவு ஏன் பிராமணர்களுக்கும் இடையே கூட சமத்துவமின்மை நிலவுகிறது. அங்கு மட்டும் 50 சாதிகள் உள்ளன. சனாதனம் என்பது கருத்தியல் பகை.. நாம் பிராமணர்களை வெறுக்கவில்லை.. இங்கு வெறுப்பு அரசியல் செய்யவும் வரவில்லை.. விளக்க அரசியலையே செய்ய முயல்கிறேன்.

மனு தர்மம்
இந்தியாவில் இன்னும் கூட மனுதர்மம் தான் ஆட்சி நடைபெறுகிறது. அதன் காரணமாகவே ஆணவப் படுகொலைகள் நாட்டில் இன்னும் தொடர்கிறது. மிகப்பெரிய வன்முறை பெண்கள் மீது நடந்து உள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் குடும்ப அமைப்புக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய சூழல் உருவாகி உள்ளது" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications