“பதவி கேட்டு நாங்க கதவு தட்டல!”.. பரவும் தகவல்களுக்கு விசிக எம்பி ரவிக்குமார் அதிரடி பதில்
சென்னை: தமிழக அரசியலில் கூட்டணி கணக்குகள் தீவிரமடைந்துள்ள நிலையில், விசிக பதவிகள் கேட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களுக்கு அக்கட்சியின் எம்.பி. ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். "விசிக எந்த பதவியும் கோரவில்லை; பரவும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை" என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பிறகு, மாநில அரசியலில் கூட்டணி மற்றும் ஆட்சி அமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்த தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், தனித்து ஆட்சி அமைக்க தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாததால், மற்ற கட்சிகளின் ஆதரவை பெற தவெக தரப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தவெகவுக்கு வழங்குவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் நேற்று தவெகவுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் வட்டாரத்தில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தின.
இதற்கிடையில், விசிக அதிகாரப்பூர்வமாக தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்குமா? இல்லையா? என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இன்று இதுகுறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இந்த சூழலில், கூட்டணியில் இணைய விசிக சார்பில் சில முக்கிய பதவிகள் கோரப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. அமைச்சரவை பதவி, துணை முதல்வர் பதவி உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக கூறப்பட்ட இந்த தகவல்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை கிளப்பின.
ஆனால் இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விசிக எம்.பி. ரவிக்குமார் விளக்கம் அளித்துள்ளார். "விசிக பதவிகள் கேட்டதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை. கூட்டணி மற்றும் ஆதரவு குறித்து கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்," என அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விசிக எம்.பி. ரவிக்குமார் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: "வேண்டுகோள் விசிக சார்பில் பதவிகள் கேட்கப்படுவதாகப் பரப்பப்படும் செய்திகள் உண்மைக்கு மாறானவை. ஊடகங்கள் அதை நம்பவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம். விசிகவை சிறுமைப்படுத்தும் முயற்சிக்கு ஊடகங்கள் உடன்போக வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனால், தவெக - விசிக இடையிலான அரசியல் நகர்வுகள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளன. விசிக இறுதியாக எந்த முடிவை எடுக்கப் போகிறது. தவெக தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தருமா. அல்லது தனித்த நிலைப்பாட்டை தொடருமா என்கிற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் மேலும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications