தமிழ்நாட்டில் 3-வது நாளாக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவபொம்மை எரிப்பு- வழக்கறிஞர்களும் போராட்டம்!
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3-வது நாளாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தாராபுரத்தில் ஆளுநர் ரவியின் உருவபொம்மையை எரிக்க முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மயிலாடுதுறையில் ஆளுநர் ரவிக்கு எதிராக வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னிச்சையாக உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு அரசு தயாரித்த உரையின் சில பகுதிகளை வாசிக்காமல் தவிர்த்தார். இதற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு அதிருப்தி தெரிவித்து ஆளுநர் ஆர்.என்.ரவி, வெளிநடப்பு செய்தார். இது பெரும் சர்ச்சையானது.

தமிழ்நாட்டுக்கு தமிழகம் என பெயர் மாற்றம் தேவை; தமிழ்நாடு சட்டசபையில் தன்னிச்சையாக உரை வாசித்தது உள்ளிட்டவைகளால் தமிழ்நாடு முழுவதும் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. தமிழ்நாட்டின் பல இடங்களில் ஆளுநர் ரவியின் உருவபொம்மையை எரிக்க முயன்றனர். சென்னை முதல் கோவை வரையிலும் புதுச்சேரியிலும் ஆளுநருக்கு எதிராக போராட்டங்கள் கடந்த 2 நாட்களாக நடைபெற்றன.

இன்று 3-வது நாளாகவும் ஆளுநர் ரவிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அண்ணா சிலை முன்பு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை கண்டித்து தாராபுரம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
விடுதலை சிறுத்தை கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் தமிழன் முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆளுநர் ரவியின் உருவ பொம்மையை எரிக்க சிலர் முயற்சி செய்தனர். ஆனால் தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் தனராசு தலைமையில் அந்த பொம்மையை அப்புறப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த 15 பேரை கைது செய்தனர்.

மேலும் ஆதித்தமிழர் பேரவை கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என். ரவி யை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஆளுநர் ரவியின் புகைப்படத்தை மாவட்ட தலைவி சாவித்திரி காலணியால் அடித்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த போலீசார் சாவித்ரி உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இதேபோல் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஆளுநர் ஆர்.என் ரவியின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவர் வேலு குபேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். மேலும் மத்திய அரசு உடனடியாக ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications