பாஜகவால் எந்த பயனும் இல்லை.. அதிமுக கூட்டணியை முறிக்க வேண்டும்.. எச்சரிக்கும் திருமாவளவன்!
பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை: பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் அதிமுகவுக்கு எந்தப் பயனும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்து வெற்றிபெற பாஜக முயற்சிப்பதாக கூறிய அவர், அதிமுக இல்லாமல் பாஜக தேர்தலை சந்திக்க வாய்ப்பில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் அதிமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.
அவரைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த ஐடி விங் நிர்வாகிகள் ஏராளமானோர் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இது அதிமுக - பாஜக கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக நிர்வாகிகள் கண்டனம்
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டி, பாஜக கூட்டணியில் இருந்து கொண்டு அதிமுக இதனை செய்திருக்க கூடாது என்று காட்டமாக பதிவிட்டிருந்தார். அதேபோல் அதிமுக இடைக்கால பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படங்களை எரித்து பாஜகவினர் சிலர் கண்டனம் தெரிவித்தனர்.

ஜெயக்குமார் பதிலடி
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், பாஜகவை போல் அதிமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்பட்டால் பாஜகவால் ஈடுகட்ட முடியாது. பாஜகவினர் சிலர் விருப்பப்பட்டு மாற்றுக் கட்சியில் இணைகிறார்கள். அதனை ஏற்கும் பக்குவம் அண்ணாமலைக்கு தேவை. அதேபோல் பாஜக உடனான கூட்டணி தொடரும். அதில் எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

பாஜக டெபாசிட் வாங்காது
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், அதிமுகவில் இல்லாமல் பாஜக தனியே போவதற்கு வாய்ப்பு கிடையாது. பாஜக தனித்து நின்றால் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்க முடியாது. எனவே, அதிமுக முதுகில் ஏறி வசாரி செய்ய வேண்டும் என்பது கட்டாயம். எப்படி இருந்தாலும் அதிமுகவை தனித்து செயல்பட விட மாட்டார்கள்.

அதிமுக எந்தப் பயனுமில்லை
அந்த நிலையில் தான் அதிமுகவிற்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கிறோம். நீங்கள் தேர்தலை மட்டும் கவனத்தில் கொண்டோ, பாஜகவால் எந்த நெருக்கடியும் வரக் கூடாது என்ற தற்காப்பு உணர்வில் இருந்து மட்டுமே முடிவை எடுக்கக் கூடாது. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு எந்த பயனும் இல்லை. அது பாஜகவுக்கு தான் பயனளிக்கும்.

தமிழ்நாட்டிற்கு பாதிப்பு
அதேபோல் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அதிமுகவுக்கு மட்டும் பாதிப்பில்லை, தமிழ்நாட்டிற்கே பாதிப்பு. எனவே, அதிமுக சுதந்திரமாக முடிவு செய்ய வேண்டும். பாஜகவை கழற்றிவிட வேண்டும். பாஜக இல்லாமல் அதிமுக தேர்தலை சந்திப்பது அதிமுகவுக்கும் நல்லது. தமிழ்நாட்டிற்கும் நல்லது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications