ஸ்டாலினுக்கு சிக்கல்.. தனி சின்னத்தை விரும்பும் கட்சிகள்.. கிளம்பியது பூசல்.. மிஷன் 200 நனவாகுமா?
திமுக கூட்டணியில் சின்னம் தொடர்பான பிரச்சனை வெடித்துள்ளது
சென்னை: திமுகவுக்கு சிக்கல் எழுந்துள்ளது.. அதன் கூட்டணி கட்சிகள் சின்னம் பிரச்சனைகளை எழுப்ப தொடங்கி உள்ளதால், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விரைவில் தேர்தல் வரப்போவதால், அரசியல் கட்சிகள் மும்முரமாகி உள்ளன.. கூட்டணி மற்றும் சீட் விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் திமுக இந்த முறை ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.. இதனால் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவே போட்டியிட இருப்பதாகவும் செய்திகள் 3 மாதத்துக்கு முன்பே கசிந்தது.
போட்டி
இந்த தகவலை அடுத்து, கூட்டணி கட்சிகளின் முடிவு என்னவாக இருக்கும்? 200 தொகுதிகளிலுமே திமுக போட்டியிட்டால், கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் வெளியே வருவார்களா? கூட்டணி உடையுமா? 3வது அணி அமைக்கப்படுமா? என்பன போன்ற சலசலப்புகளும். இதில் காங்கிரஸ் தரப்பு, திமுகவிலேயே தொடரும் என்று தெரிகிறது.. மேலும், திமுக என்ன சீட் தந்தாலும் அதனை அப்படியே மறுக்காமல் ஏற்க கூடிய நிலைமையில் உள்ளதாகவும் தெரிகிறது.
மதிமுக
அப்படியானால், கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக கட்சிகளின் நிலைமை என்னவென்ற அடுத்த சந்தேகம் எழுகிறது.. இது சம்பந்தமாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என்று திட்டவட்டமாக கூறினார்.. அதாவது திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என்கிறார் வைகோ.
20 சீட்கள்
ஏற்கனவே திமுக தலைமையிடம் 20 சீட்களை கேட்டு வரும் நிலையில், அடுத்த குண்டை தூக்கி போட்டுள்ளார் வைகோ.. இந்த பரபரப்புக்கு இடையே விசிகவும் தங்கள் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.. செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனி சின்னத்தில் தான் போட்டியிடும் என்று அறிவித்துள்ளார்..
தனித்தன்மை
விசிக, மதிமுக கட்சிகளை பொறுத்தவரை 2 சிக்கல்கள் உள்ளன.. ஒன்று இந்த கட்சிகளின் உறுப்பினர்கள் திமுகவில் பொறுப்பில் இருக்கிறார்கள்.. மற்றொன்று, லட்சோபலட்சம் தொண்டர்களை பெற்றுள்ள இந்த கட்சிகள், தங்களின் தனித் தன்மையை காக்கப்பட வேண்டும் என்ற கட்டாயத்திலும் உள்ளனர். இதுதான் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.. தங்களுக்கு தனிச்சின்னம் கேட்டு டெல்லியில் விசிக முகாமிட்டிருந்தபோதே உதய சூரியன் சின்னத்தில் அக்கட்சி போட்டியிட விரும்பவில்லை என்று திமுகவுக்கு தெரிந்துவிட்டது. இதனால், திமுக அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல் வெளியானது.
சின்னம்
2 வருஷத்துக்கும் மேலாக, கூட்டணியில் நீடித்து வரும் இந்த கட்சிகள், திமுகவின் பல்வேறு போராட்டங்களிலும் தொடர்ந்து பயணித்து வரும் இந்த கட்சிகள் இனி சொந்த சின்னத்தில் நிற்பது என்பது முடிவாகி உள்ளது.. ஒருவேளை இந்த கட்சிகள் தனிச்சின்னத்தில் போட்டியிட்டால், அது சாதகமான சூழலை பெற்று தருமா என்பது தெரியவில்லை.
திருமாவளவன்
ஏனென்றால், விசிகவை பொறுத்தவரை மோதிரம் சின்னமும் இல்லாத நிலையில், புதிதாக சின்னத்தை வாங்கி, அதன்பிறகு அதை மக்களிடம் கொண்டுச்சென்று, வெல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. அது இந்த குறுகிய காலத்தில் சாத்தியமாகுமா? அல்லது மக்களுக்கு பழகிப்போன உதயசூரியன் சின்னத்திலேயே நின்று வெற்றி பெற்றுவிட்டால் அது இன்னும் எளிதாக இருக்கக்கூடுமா? என்ற இருவேறு கருத்துக்கள் எழுகின்றன.
பாஜக
இங்குதான், தனித்தன்மை என்ற விஷயம் தலைதூக்குகிறது.. 2 கட்சிகளுமே 20 வருஷத்துக்கு மேல் தமிழகத்தை களம் கண்ட நிலையில், இன்னொரு கட்சியின் சின்னத்தில் நிற்பது சரியாக இருக்காது என்கின்றனர்... சுயமாக செயல்படவும் முடியாது.. அதேசமயம், திமுகவின் நட்பையும் இழந்துவிட முடியாது.. இதையெல்லாம் தீவிரமாக யோசிக்கப்பட்டு வருவதாகவே தெரிகிறது.. எப்படி பார்த்தாலும் இவர்கள் அனைவரின் குறிக்கோள் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதாக இருக்கும்பட்சத்தில், எடுக்கப்போகும் முடிவுகளும் கூட்டணிக்கு சாதகமாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.