அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை!
சென்னை: ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை இந்த தேர்தலில் தீவிரமாக எழுந்து அடங்கிய நிலையில், அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார் விசிக எம்.பி ரவிக்குமார். அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று, அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும் எனவும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலுவாக குரலெழுப்ப வேண்டிய நேரம் இது என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டமேதை அம்பேத்கரின் 135-வது பிறந்த நாள் விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தநிலையில், அமைச்சரவையில் இடம் ஒதுக்க வேண்டும் எனவும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வலுவாக குரலெழுப்ப வேண்டிய நேரம் இது என எம்.பி-யும் விசிக பொதுச் செயலாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூகவலைதள பதிவில், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் நாம் எழுப்ப வேண்டிய கோரிக்கை அமைச்சரவையிலும் இட ஒதுக்கீடு' எனத் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து இதுகுறித்தான கட்டுரை ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அந்தக் கட்டுரையில், தமிழ்நாடு சட்டசபையில் பட்டியல் சமூகத்தினருக்கென இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 44 இடங்கள் பட்டியல் வகுப்பினருக்கும், 2 இடங்கள் பழங்குடியினருக்கும் என இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது, மொத்த எண்ணிக்கையில் 20% சதவீதம் ஆகும். ஆனால், அமைச்சரவையில் அவர்கள் 5-ல் ஒரு பங்கு கூட இல்லை. ஏனென்றால், சட்டசபை உறுப்பினராவதற்கு மட்டுமே இட ஒதுக்கீடு உள்ளது. அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு இடஒதுக்கீடு இல்லை.
'தாழ்த்தப்பட்ட மக்கள் சட்டப்பேரவையில் இடங்களை பெறுவதன் மூலம் அரசாங்க நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்தும் அதிகாரத்தைப் பெற்றிருப்பது எப்படி அவசியமோ, அதேபோல், அரசாங்கத்தின் பொதுக்கொள்கையை வகுக்கும் வாய்ப்பை அவர்கள் பெற்றிருப்பது அவசியம்' என அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.
1942 ஆம் ஆண்டு பட்டியல் சமூக மக்களின் அனைத்திந்திய மாநாடு நடைபெற்றது. அதில், பேசிய மகாத்மா காந்தி, அமைச்சர் என்பவர் அனைவரின் நம்பிக்கையையும் பெற்ற உயர்ந்த மனிதராக இருத்தல் வேண்டும். சட்டப்பேரவையில் இடம்பெற்ற பிறகு, அமைச்சரவையில் இடம்பெற தங்கள் தகுதிகளையும், மக்கள் செல்வாக்கையும் பெற்றிருத்தல் வேண்டும் என தெரிவித்தார். அதற்கு, பதிலளித்த அம்பேத்கர், தேர்தலில் வேட்பாளர்களை சாதி அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என அம்பேத்கர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, தீண்டப்படாதவர்களைப் பொறுத்தவரை தகுதியுள்ளவர்களைக் காட்டிலும், தகுதியில்லாதவர்களே தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை அம்பலப்படுத்தினார். இதனாலேயே, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடங்களை பெற முடியாமல் போனது. இதை மாற்றுவதற்கு, அமைச்சரவையிலும் தமக்குரிய இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குரலெழுப்ப வேண்டிய நேரம் இது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போதையும் விட, இந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற முழக்கம் அதிகமாக எழுந்தது. ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை திமுக தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்திருந்தார். அதிமுகவும், ஆட்சியில் பங்கு என்பது தமிழ்நாட்டில் சாத்தியமில்லை என்றே கூறியது.
இந்நிலையில், விசிக எம்.பி ரவிக்குமார், அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். அமைச்சரவையில் பட்டியலினத்தவர் 5-ல் ஒரு பங்கு கூட இல்லை என அவர் குறிப்பிட்டு, அமைச்சரவையிலும் தமக்குரிய இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குரலெழுப்ப வேண்டிய நேரம் இது எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications