இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான்! 18-வது ஆண்டாக நோன்பு வைக்கும் திருமாவளவன்!
சென்னை: இஸ்லாமியர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலானில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாளை முதல் அடுத்த 5 நாட்கள் நோன்பு வைக்கிறார்.
ஏப்ரல் 11-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு திருமாவளவன் நோன்பு நோற்க இருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இசுலாமிய சனநாயகப் பேரவை உறுதி செய்துள்ளது.
திருமாவளவனை பொறுத்தவரை இந்தாண்டு 18-வது ஆண்டாக அவர் நோன்பு வைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

18-வது ஆண்டாக
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று நோன்பு. ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்களும் பகலில் உண்ணாமல், பருகாமல், தான தர்மங்களை அதிகரித்து அவர்கள் நோன்பை கடைபிடிப்பது வழக்கம். மேலும், பசி என்பதை யாவருக்கும் உணர்த்தும் மாதமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கடந்த 17 ஆண்டுகளாக நோன்பு நோற்பதை கடைபிடித்து வரும் நிலையில், 18-வது ஆண்டாக இந்தாண்டும் நோன்பு வைக்கிறார்.

அதிகாலை உணவு
மத நல்லிணக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும், சகோதரத்துவத்தையும் பேணும் வகையில் திருமாவளவன் நோன்பை கடைபிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. திருமாவளவன் நோன்பு நோற்கும் நாட்களில் சென்னையில் உள்ள அபு பேலஸ் ஹோட்டலில் சஹர் (அதிகாலை உணவு) உட்கொள்வார். அவருடன் சஹர் உணவை சாப்பிடுவதற்காக ஒரு பெரும் படையே குவிவது வழக்கம்.

இஃப்தார் நிகழ்ச்சி
அதேபோல் தன்னுடன் சேர்ந்து மாலையில் நோன்பு திறப்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உள்ள இஸ்லாமிய பிரமுகர்களை மட்டுமல்லாமல் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்களையும், தமிழறிஞர்களையும், ஊடகவியலாளர்களையும் திருமா அழைத்து இஃப்தார் விருந்து அளிப்பார். இதனால் அந்த நிகழ்ச்சியும் தினமும் களைகட்டும்.

5 நாட்கள் நோன்பு
திருமாவளவன் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடுகளை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒரு பிரிவான இசுலாமிய சனநாயகப் பேரவை கவனித்து வருகிறது. இதனிடையே திருமாவளவன் நோன்பு வைக்கும் 5 நாட்களும் அவரை தேவையின்றி சந்திப்பதை கட்சி நிர்வாகிகள் தவிர்த்து ஓய்வெடுக்க ஒத்துழைக்குமாறு இசுலாமிய சனநாயகப் பேரவை தரப்பில் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications