விசிக நலனுக்கு பாதிப்பு..ஆதவ் அர்ஜுனா 6 மாதம் சஸ்பெண்ட்! திருமாவின் அறிவிப்பில் ‘இதை’ கவனிச்சீங்களா?
சென்னை: சென்னையில் கடத்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, திமுக குறித்து பேசியது அந்தக் கட்சி நிர்வாகிகளை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் விசிக கட்சியிலிருந்து ஆறு மாதம் ஆதவ் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார் திருமாவளவன். அதில் அவரது இடை நீக்கத்திற்கான காரணத்தை குறிப்பிட்டு இருக்கிறார். அது தான் இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.
சென்னையில் கடந்த 6ஆம் தேதி வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம், விகடன் இணைந்து வெளியிடும் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தின் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளரும், நூலை உருவாக்கியவருமான ஆதவ் அர்ஜுனா, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பேரனான ஆனந்த் டெல்டுண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த பேசிய ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு, திமுகவையும், ஏன் அவரது கட்சியான விசிக நிர்வாகிகளையும் கூட கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.. தமிழகத்தில் மன்னராட்சியை ஒழிக்க வேண்டும், திரைத்துறையில் கட்டுப்பாட்டை வைத்திருப்பது, ஊழல், வேங்கை வயல் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் திமுகவை மறைமுகமாக சாடி இருந்தார். மேலும் விஜய், திமுக குறித்து பேச பேச கைதட்டி உற்சாகப்படுத்தினார்.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளே தற்போது அவரை விமர்சித்து வருகின்றனர். ஆதவ் பேசியதில் தனக்கும் உடன்பாடில்லை என கூறியிருந்தார் திருமாவளவன். மேலும் அவர் மீது நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். அதே நேரத்தில், திமுக, அதிமுக, பா.ஜ.க ஆகிய கட்சிகளில் இருப்பதைப் போல, நாங்கள் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது ஏற்புடையது அல்ல. நாங்கள் பேசியிருக்கிறோம் முடிவை அறிவிப்போம்.” என்று திருமாவளவன் சஸ்பென்ஸ் வைத்தார்.
இந்நிலையில் ஆதவ் அர்ஜூனா அவர்கள் கட்சியிலிருந்து ஆறுமாத காலத்துக்கு இடைநீக்கம் செய்யப்படுகிறார் என அறிவித்துள்ளார். நேற்று திருமாவளவனின் பேச்சு ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற ரீதியில் இருந்த நிலையில், 24 மணி நேரத்தில் அந்த கணிப்பு பொய்யாகி இருக்கிறது. கட்சியிலிருந்து ஆறு மாதங்களுக்கு அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவித்திருக்கிறார் திருமாவளவன். இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவின் இடைநீக்கத்துக்கு காரணம் என்ன என்பது குறித்து விவரித்துள்ளார்.
அதில் ஆதவ் அர்ஜுனாவில் பேச்சு அண்மைக்காலமாக 'கட்சியின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்' வகையில் செயல்பட்டு வருகிறார் என்பது தலைமை நிர்வாகத்தின் கவனத்திற்கு தெரிய வந்திருக்கிறது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் கட்சியின் அறிவுறுத்தல்களை மீறி எதிர்மறையாக செயல்பட்டு வருவதாகவும், அது கட்சியின் நலன் மற்றும் அதிகார வலிமைக்கானதாக மேலோட்டமாக தோன்றினாலும் "தலைமையின் மீதான நன்மதிப்பையும் நம்பகத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும்" வகையில் கடுமையான விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது திருமாவளவன் மீதான நன்மதிப்பும் நம்பகத்தன்மையும் திமுக தலைமையிடம் குறைந்து வருவதை சுட்டிக்காட்டிய திருமாவளவன் இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். விசிக நலன் என்பது வரும் காலத்தில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களாக இருக்கலாம் எனவும், திமுக தலைவரை சந்திப்பதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்திருப்பதையும் கவனிக்க வேண்டும் என்கின்றனர்.













Click it and Unblock the Notifications