3 நாள் கொடியேற்றுவதெல்லாம் சரி.. "சாதியவாதம்".. கொடியேற்ற தடுப்போர் கைதாவார்களா?.. விசிக சுளீர்!
சென்னை: ஆதிதிராவிட சமூகத்தை சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் கொடி ஏற்ற முடியவில்லை. கொடி ஏற்ற தடுப்பவர்களை தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் கைது செய்வார்களா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. வைர விழாவையொட்டி இன்று முதல் 3 நாட்களுக்கு தேசியக்கொடியை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்றலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரவு நேரத்திலும் இந்த 3 நாட்கள் தேசியக் கொடியை ஏற்றி வைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலானோர் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகிறார்கள். அது போல் சமூகவலைதளங்களின் முகப்பு பக்கத்தையும் தேசியக் கொடியாக மாற்றவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

தேசியக் கொடி
இந்த நிலையில் இந்த தேசியக் கொடி ஏற்றுவது குறித்து பலவிதமான கருத்துகள் நிலவுகின்றன. வேலையின்மை, பசி, வறுமை உள்ளிட்டவை இந்தியாவில் தலைவிரித்தாடும் நிலையில் கொடி ஏற்றி வைக்க சொல்வது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

நாளிதழ்
அவர் ஒரு நாளிதழில் வெளியான பேப்பர் கட்டிங்ஸை மேற்கோள்காட்டி இன்று முதல்3நாட்களுக்கு தேசியக்கொடி ஏற்ற இந்திய தலைமை அமைச்சரும் பாஜகவினரும் வலியுறுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் இந்துத்துவ சாதியவாதிகளால் ஆதிதிராவிட சமூகத்தைச்சார்ந்த ஊராட்சித் தலைவர்கள் கொடி ஏற்ற முடியவில்லை.

எத்தனை ஊராட்சிகள்
கொடி ஏற்ற தடுப்பவர்களை தேசியக்கொடி அவமதிப்பு வழக்கில் கைது செய்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பேப்பர் கட்டிங்ஸில் தலித் ஊராட்சித் தலைவர்களின் நிலை என்ற பெயரில் தேசிய கொடி ஏற்ற முடியாத ஊராட்சிகள்- 25 உள்ளன. நாற்காலியில் அமரமுடியாதவை 22, அலுவலக சாவி தலைவருக்கு கிடைக்காதவை 14 உள்ளன.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கேள்வி
தலைவர் தீண்டாமை எதிர்கொள்ளும் ஊராட்சி 25 உள்ளன. பெண் தலைவர்களுக்கு எதிரான பாகுபாடு 17 இடங்களில் உள்ளன. கிராம சபைக்கு தலித் அல்லாதவர்கள் வர மறுக்கும் ஊராட்சிகள் 17 உள்ளன என ஒரு பெரிய பட்டியலே கொடுக்கப்பட்டது. இதே பட்டியலை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் வெளியிட்டு தற்போதைய திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்கள் என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications