வேலூர் கற்றுக் கொடுத்த பாடம்.. திமுக கூட்டணிக்குள் காத்திருக்கிறதா பெரும் விரிசல்?
Recommended Video
சென்னை: வேலூர் லோக்சபா தொகுதியில், திமுக பெற்றுள்ள வெற்றி என்பது, அந்த கூட்டணிக்குள் ஒரு விரிசலை ஏற்படுத்த போகிறது என்றால் சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படித்தான் நடக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் அரசியல் பார்வையாளர்கள்.
வேலூர் லோக்சபா தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கும், அதிமுகவின் இரட்டை இலை சின்னத்துக்கும் தான் நேரடி போட்டி இருந்தது.
இப்படி ஒரு போட்டி வந்துள்ள நிலையிலும், மிகச் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தான் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற முடிந்துள்ளது. இரட்டை இலை என்ற சின்னத்துக்கு இருக்கக்கூடிய அமோக மக்கள் ஆதரவு, எதிர்க்கட்சிகள் நினைத்த அளவுக்கு சரிவடைந்து விடவில்லை, என்பதை தான் இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்தாலும் இடைத் தேர்தலில் ஜெயிச்சிருக்கோம்.. இது பெரிய விஷயம்.. பொன்முடி பூரிப்பு
நாங்குநேரி, விக்கிரவாண்டி
சரி.. இதற்கும் திமுக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும் என்ற கணிப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? விஷயம் இங்கு தான் உள்ளது. அந்தப் பிரச்சினை தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள இரு சட்டசபை இடைத் தேர்தல்களில் இருந்து தொடங்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். லோக்சபா தேர்தலின்போது நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்த குமார், கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். மற்றொரு பக்கம், ஜூன் 14 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல்நலக்குறைவால் காலமானார். இதனால் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகள் காலியாக உள்ளன.
காங்கிரசுக்கு இல்லை
விரைவிலேயே, இந்த இரு தொகுதிகளுக்கும், தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில், நாங்குநேரியை காங்கிரசுக்கு மீண்டும் விட்டுக் கொடுக்க திமுக தயாரில்லை என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி லோக்சபா தேர்தலிலும் தற்போது நடைபெற்ற வேலூர் தொகுதி தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளதால், அந்த கட்சி கடும் உற்சாகத்தில் உள்ளது.
உதய சூரியன் vs இரட்டை இலை
வேலூர் தொகுதியில் உதயசூரியன் சின்னம் இருந்தும்கூட, மிகவும் போராடித்தான் வெற்றியை பெற வேண்டியிருந்தது திமுக. இந்த நிலையில் நாங்குநேரியில் கை சின்னத்துக்கு மக்கள் ஓட்டு போடுவார்களா என்ற சந்தேகம் திமுக தலைமைக்கு வந்துள்ளது. உதய சூரியனா, இரட்டை இலையா என்றுதான், நாங்குநேரியில் போட்டி இருக்க வேண்டுமே தவிர, கை சின்னமா, இரட்டை இலையா என்ற போட்டி உருவானால் ஆளுங்கட்சி எளிதாக வென்று விடும் என்ற கணக்கு போடுகிறது திமுக தலைமை.
தகராறு
இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சி தொடர்பாக திமுக கூட்டணியில் உள்ள வைகோ கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தமிழர்களுக்கு காங்கிரஸ் மன்னிக்க முடியாத துரோகங்களை செய்து உள்ளது என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே, இப்படி கூட்டணிக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டு விட்ட நிலையில், நாங்குநேரி தொகுதியை காங்கிரசுக்கு கொடுக்காவிட்டால் திமுகவுக்கும் காங்கிரசுக்கும் உரசல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே வேலூர் தொகுதியில் பெற்றுள்ள இந்த வெற்றி என்பது ஆளும் அதிமுகவுக்கு ஓரளவு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. ஆனால் எதிர் கட்சி திமுக கூட்டணியில் தான் குழப்பம் ஏற்பட போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். நாங்குநேரி தொகுதி விஷயத்தில், ஸ்டாலின் எந்த மாதிரி முடிவை எடுக்க போகிறாரோ அதை பொறுத்துதான் இந்த கூட்டணி எப்படி இருக்கப் போகிறது என்பது முடிவாகும்.