தருமபுரி, சிதம்பரம் தேர்தல் முடிவுகளிலும் இதுதான் நடந்தது.. தொடர்ந்து கெத்து காட்டி வரும் திமுக!
Recommended Video
சென்னை: தருமபுரி எம்பி தேர்தலிலும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அன்புமணிக்கும், திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கும் இடையே முன்னிலை நிலவரங்கள் எப்படி மாறி மாறி வந்ததோ அப்படித்தான் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளிலும் ஏற்பட்டது.
வேலூரில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில் திமுக சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக சார்பில் ஏசி சண்முகம், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி ஆகியோர் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.
இதில் திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஏறுவதும் இறங்குவதுமாக இருக்கிறது. காலை முதல் ஏசி சண்முகம் முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்து வந்தார்.
தருமபுரி
இந்த நிலையே தொடர்ந்து நீடித்து வந்தது. இது போல்தான் கடந்த மே மாதம் நடைபெற்ற தருமபுரி எம்பி தொகுதி வாக்கு எண்ணிக்கையிலும் நடைபெற்றது. தருமபுரியில் அதிமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் அன்புமணி ராமதாஸும், திமுக சார்பில் செந்தில் குமாரும் போட்டியிட்டனர்.
வாக்குகள் வித்தியாசம்
இந்த தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முதலில் அன்புமணி முன்னிலை வகித்து வந்தார். இதற்கு அவர் கடந்த முறை தருமபுரியில் மேற்கொண்ட நலத்திட்டங்கள்தான் காரணம் என சொல்லப்பட்டன. எனினும் பாமக வேட்பாளருக்கும் திமுக வேட்பாளருக்கும் சொற்ப அளவிலான வாக்குகளே வித்தியாசத்தில் இருந்தன.
உதயசூரியன் சின்னம்
மற்ற 36 தொகுதிகளிலும் வெற்றி தோல்விகள் முடிவுகள் வெளியான நிலையில் தருமபுரி மற்றும் சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் மட்டும் வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வந்தது. இறுதியில் தருமபுரியில் நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக வேட்பாளர் செந்தில் குமார் வெற்றி பெற்றார். அதே வேளையில் சிதம்பரம் தொகுதி முடிவுகள் நள்ளிரவு வரை நீடித்த நிலையில் அதிலும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் திருமாவளவன் வெற்றி பெற்றார்.
எதிர்பார்ப்பு
இது போன்ற ஒரு சூழலே வேலூர் எம்பி தேர்தல் வாக்கு எண்ணிக்கையிலும் நடைபெற்று வந்தது. இது போல் போக்கு காட்டி போக்கு காட்டி இறுதியில் தருமபுரி, சிதம்பரத்தை போல் திமுக வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. தொண்டர்களும் துரைமுருகன் ஆதரவாளர்களும் எதிர்பார்த்தபடியே ஏசி சண்முகத்தை கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.