அனைத்து கோயில்கள் என சொல்லாமல்.. பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கை உறுதி செய்க..வேல்முருகன்
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவரும், பண்ருட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விவகாரத்திலும், கரூர் பசுபதீசுவரர் கோயில் குடமுழுக்கு விவகாரத்திலும், தமிழில் குடமுழுக்கு முறையாக நடத்தப்படவில்லை.

27ஆம் தேதி குடமுழுக்கு
இச்சூழலில், தமிழ் கடவுள் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிட வேண்டும் என, வழக்கறிஞர் தமிழ் இராசேந்தின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

பழனி முருகன் கோயில்
எனவே, பழனி முருகன் கோயில் கருவறை, வேள்விச்சாலை, கோபுரக்கலசம் ஆகிய இடங்களில் தமிழ் மந்திரங்களும், சமஸ்கிருத மந்திரங்களும் சம அளவில் அர்ச்சிக்கப்படும் என்பதை பொத்தாம் பொதுவாக கூறாமல், அறிக்கை வாயிலாக தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது என வேல்முருகன் கூறியுள்ளார்.

அறுபடை வீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாக பழனி முருகன் கோயில் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோயில் குடமுழுக்கு வரும 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை
இதனிடையே பழனி முருகன் கோயிலில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகிறார்கள் . இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தமிழில் மந்திரங்கள் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications