Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாதாளத்தில் இந்திய பொருளாதாரம்! இண்டிகோ விமான சேவைகள் முடங்க யார் காரணம்? தவாக வேல்முருகன் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலை, ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாக தவறுகளாக மட்டுமல்ல, பாஜக அரசு தள்ளிச் சென்றத் தனியார்மயப் பாதையின் கொடூர விளைவு என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

TVK Velmurugan

இதுகுறித்து தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த இரண்டு தினங்களாக இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலை, ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாக தவறுகளாக மட்டுமல்ல, பாஜக அரசு தள்ளிச் சென்றத் தனியார்மயப் பாதையின் கொடூர விளைவு என்பதை இன்று நாடு முழுவதும் மக்கள் உணரத் தொடங்கி உள்ளனர்.

இண்டிகோ விமான நிறுவனத்தின் நிர்வாக சீர்கேட்டினால், ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கிக் கொண்டு, மருத்துவ அவசரப் பயணங்கள் தடைபட்டு, மாணவர்கள் தேர்வுகளுக்குச் செல்ல முடியாமல், வணிகச் சந்திப்புகள் ரத்து செய்யப்பட்டு, சுற்றுலா முதல் சரக்குப் போக்குவரத்து வரை அனைத்தும் தடுமாறும் நிலை உருவாகியுள்ளது. இந்த ஒரு சம்பவமே, நாட்டின் முக்கிய சேவைகள் தனியாரின் கைகளில் சென்றால், என்ன கொடுமை நடக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள போதுமானது.

இப்படியாக, ஒரு விமான நிறுவனம் மட்டும் ரத்து செய்தால் இத்தனை குழப்பம் என்றால், ஒரு நாள் இந்தியா முழுவதும் ரயில் சேவை நின்றுவிட்டால் என்ன ஆகும்? கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலைக்கு போக முடியாமல் சாலையில் சிக்கிக் கொள்வார்கள். தினக்கூலி தொழிலாளர்கள் அந்த நாள் உணவையே இழந்து போவார்கள். நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் உயிருக்கு ஆபத்து ஏற்படும். வேலைக்கு, படிப்புக்கு, திருமணத்திற்கு, அவசரப் பயணங்களுக்கு செல்ல வேண்டிய சாதாரண மக்கள் துவண்டுபோய்விடுவர்.

இதேபோல, ஒரு நாள் கப்பல் போக்குவரத்து நின்றுவிட்டால், இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி முழுவதும் முடங்கிவிடும். வெளிநாட்டுக்கு அனுப்ப வேண்டிய பொருட்கள், கிடங்குகளில் அடைந்து போகும். இந்தியாவுக்குள் வர வேண்டிய மருந்துகள், எண்ணெய்கள், உபகரணங்கள் குறைவடையும். ரூபாயின் மதிப்பு உலக சந்தையில் சரிந்து, நாட்டு பொருளாதாரமே தடுமாறும்.
ஏற்கனவே, ரூபாயின் மதிப்பு சரிந்து போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசை ஆளும் பாஜக, கடந்த பத்து ஆண்டுகளில் இந்த நாட்டின் முக்கிய சேவைகள் அனைத்தையும், துறைமுகம், விமானப் போக்குவரத்து, எரிசக்தி, தொலைத்தொடர்பு என இன்னும் பலவற்றையும், தனியார் நிறுவனங்களின் கைகளில் ஒப்படைத்து விட்டது. அரசு நடத்தும் சேவை என்றால் பொது நலனே முதன்மையாக இருக்கும். ஆனால் தனியார் நடத்தும் சேவை என்றால், இலாபமே முதன்மையானதாக இருக்கிறது. இலாபத்திற்காக பணியாளர் குறைப்பு, செலவுச் சுருக்கம், சேவைக் குறைப்பு, இவை அனைத்தும் நடக்கும். தனியார் நிறுவனங்களின் கூட்டு தவறுகளால் அல்லது மோசடி நிர்வாகங்களினால், நாட்டின் பொருளாதாரமும், நாட்டு மக்களின் எதிர்காலமும் மிகப்பெரிய அளவில் ஆபத்தில் உள்ளன.

இன்றைய இண்டிகோ விமான சேவைகள் ரத்துக்கு காரணம், அவர்களின் உள்ளக நிர்வாகக் கோளாறே என்றாலும், உண்மையில் இது ஒரு எச்சரிக்கை மணி. எதிர்காலத்தில் ரயிலா? கப்பலா? மின்சாரமா? தொலைத்தொடர்பா? எது வேண்டுமானாலும் தனியாரின் தவறுகளால் நின்றுவிட்டால் அல்லது அரசைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தனியார் நிறுவனங்கள் திட்டமிட்டால், இந்தியப் பெருநிலத்தில் வாழும் 140 கோடி மக்களின் நிலை என்னவாகும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

இதே நிலைத் தொடர்ந்தால் நடுத்தர, ஏழை மக்கள் கூட உயிர்வாழ முடியாத நிலை உருவாகும். உலகளவில் இந்தியாவின் நம்பிக்கை குறையும். பொருளாதாரம் தடுமாறும். வணிகம், தொழில், பயணம் அனைத்தும், தனியார் நிறுவனங்களின் மிரட்டலுக்குள் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உருவாகும்.

நாட்டின் அடிப்படை சேவைகள் அனைத்தும் அரசின் பொறுப்பாகவே இருக்க வேண்டும்.
மக்களின் நல சேவைகள் தனியாரின் பேராசைக்கு ஒப்படைக்கக் கூடாது.
தேசிய சொத்துக்கள் என்பவை, தனியார் நிறுவனங்களின் லாபக் கருவிகள் அல்ல, மக்களின் சொத்துகளே.

இந்தியப் பொருளாதாரத்தை படுகுழிக்கு தள்ளும் பாஜக அரசின் தனியார்மயப் போக்கை, இந்த நாடு முழுவதும் மக்கள் கண்டித்து எதிர்க்க வேண்டிய கடமை இன்று உருவாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்கள் வாழ்க்கைக்கும், பொருளாதார நிலைத்தன்மைக்கும், இப்போது மீண்டும் வலுவான பொதுத்துறை அவசியம்.

இந்தியாவை "சேவை நாடு" என்பதிலிருந்து மாற்றி "சந்தை நாடு" ஆக்கிய பாஜக அரசு, தேசியச் சொத்துகளைத் தனியார் பேராசைக்குப் உட்படுத்தி, மக்கள் நலனைக் கொஞ்சம் கூட சிந்திக்காத ஆட்சியையே நடத்தி வருகிறது. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

நாட்டைக் காப்பது மக்கள் குரலும், மக்கள் இயக்கங்களுமே என்பதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதியாக நம்புகிறது. இவ்வாறு தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+