ஹெச்.ராஜா மீது நடவடிக்கை தேவை... தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்தல்..!
சென்னை: ஊடகத்துறையினரை தொடர்ந்து இழிவாக பேசி வரும் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
ஹெச்.ராஜா போன்ற அடிப்படை நாகரிகமற்றவர்களை ஊடகத்துறையினரும் புறக்கணிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

4-வது தூண்
ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்துறையை இழிவாக பேசுவது, அவமரியாதை செய்வது போன்ற நாகரிகமற்ற செயல்களில் பாஜகவினர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவது வன்மையாக கண்டிக்கதக்கது. குறிப்பாக, கடந்த 2018ஆம் ஆண்டு, பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகர், பெண் பத்திரிகையாளர் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் இழிவுப்படுத்தி மிகவும் தரக்குறைவாக பதிவிட்டிருந்தார்.

அஞ்சியது
இதே போன்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும், பெண் பத்திரிகையாளர்களை இழிவுப்படுத்தியிருந்தார். இவர்கள் மீது அப்போதைய அதிமுக அரசும், காவல்துறையினரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்தனர். ஆனால் நியாயம் கேட்டு போராடிய ஊடகத்துறையினரை மட்டும் காவல்துறையினர் கைது செய்தனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால், எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு அஞ்சியது.
Recommended Video

மீண்டும் பேச்சு
அப்போது, எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நியாயம் கேட்டு போராடியவர்களை கைது செய்வது ஜனநாயக கேலிக்கூத்தாகும் என கண்டனம் தெரிவித்திருந்தது. கடந்த ஆட்சியில் எஸ்.வி.சேகர், ஹெச்.ராஜா மீது அதிமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், ஊடகத்துறையிரை மீண்டும் இழிவுப்படுத்தும், அநாகரிக சொற்களால் ஹெச்.ராஜா மீண்டும் பேசியுள்ளார்.

பாஜக தலைவர்கள்
அதிமுக அரசு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால், ஊடகத்துறையினரை மீண்டும் இழிவுப்படுத்தும் துணிச்சல் ஹெச்.ராஜா வகையறாக்களுக்கு வந்திருக்காது. பாஜகவுக்கு ஆன்மிக ஒழுக்கமும் இல்லை, அரசியல் ஒழுக்கமும் இல்லை என்பது ஹெச்.ராஜா உள்ளிட்ட பல்வேறு மாநில பாஜக தலைவர்களின் சமீபத்திய செயல்பாடுகள் மூலமாக வெளிப்பட்டு வருகிறது. இவ்வாறு வேல்முருகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications