வேங்கைவயல் விவகாரம்: திருமாவளவனின் குற்றச்சாட்டுக்கு திமுக தலைமை கழகம் பதில் சொல்லும் - துரைமுருகன்
சென்னை: வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவன் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, திமுக தலைமை கழகம் பதில் சொல்லும் என திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பதில் அளித்தார்.
சென்னை, மூலக்கொத்தளத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது திருமாவளவன் பேசுகையில், வேங்கைவயல் நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள சிபிசிஐடியின் விசாரணை ஏமாற்றத்தை அளிக்கிறது.

வேங்கைவயல் சம்பவத்தைக் கண்டித்து அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த சம்பவத்தை வாக்கு அரசியல் அடிப்படையில் அவர்கள் கையாள்வதாக தெரியவில்லை. தமிழக காவல் துறையினர் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் மீது நம்பிக்கை இழந்ததால் வேறு நம்பிக்கையின்றி இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்கிறோம்.
பட்டியலினத்தவர்களுக்கு எதிரான மனநிலை அதிகாரிகள் மத்தியில் இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வேங்கைவயல் செல்வதாக சொன்னதை வரவேற்றேன். ஆனால், அவர் அதுகுறித்து எந்தவொரு கருத்தையும் சொன்னதாக தெரியவில்லை. சிபிசிஐடியின் குற்றப் பத்திரிகையை ஏற்கக் கூடாது என சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவுள்ளோம்.
வேங்கைவயல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்பட்டிருப்போரை கைது செய்தால் மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும். சமூகநீதியின் பக்கம் திமுக அரசு நிற்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனை முதல்வரின் கவனத்துக்கு மீண்டும் எடுத்துச் செல்வோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று கூறியிருந்தார்.
கூட்டணிக் கட்சியில் இருக்கும் திருமாவளவனே வேங்கை வயல் விவகாரத்தில் காவல் துறை மீது நம்பிக்கை இல்லை என்றும், சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கூறியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், வேங்கைவயல் விவகாரத்தில் திருமாவளவனின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு திமுக தலைமை கழகம் பதில் சொல்லும் என திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பதில் அளித்தார்.
காஞ்சிபுரத்தில் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வேங்கைவயல் விவகாரத்தில் காவல் துறை மீது நம்பிக்கை இல்லை. சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, திமுக தலைமைக் கழகம் பதில் சொல்லும் என்று பதிலளித்தார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, 'ஈ.வெ.ரா பற்றி பேசிய சீமானை கைது செய்யாமல் இருக்கிறார்கள். இதில், தி.மு.க. வின் நாடகம் வெளிப்பட்டு இருப்பதாக கூறியுள்ளார் என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, செல்லூர் ராஜூக்கு இவ்வளவு விஷயம் தெரிகிறதா? பரவாயில்லையே? என்று சிரித்தபடியே துரைமுருகன் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications