போய்ட்டாரே வெற்றி.. எல்லாத்துக்கும் காரணம் "அந்த ஆபீஸ்"தான்.. அலற வைக்கும் அமமுக சென்ட்டிமென்ட்..!
வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று தாக்கியது எப்படி?
சென்னை: "வெற்றி வெற்றி என வாய் நிறைய இனி யாரை அழைத்து பேச போகிறேன் என்று டிடிவி தினகரனின் கதறல் அத்தனையும் உண்மை.. கடைசி வரை தினகரன் மீது இம்மியளவும் நம்பிக்கையை இழக்காத விசுவாசி வெற்றிவேல் என்று அமமுகவினர் பெருமையுடன் கூறுகின்றனர்.
கட்சியில் வலுவான இடத்தில், அதிகாரமிக்கவராக ஒரு மூத்த தலைவர்களை பார்க்கும்போது, பெரிதாக எந்த பலவீனமான எண்ணமும் நமக்கு வருவதில்லை.. ஆனால், உடல்நலம் குன்றியது என்ற செய்தி வரும்போதுதான், அவர்களை பற்றின நல்லவைகளும் நம் கண் முன்னால் விரிந்துவிழும்.. அப்படிப்பட்ட ஒரு ஆளுமைதான் அமமுகவின் வெற்றிவேல்.
அமமுகவினர் சிலரிடம் பேசினோம்... அவர்கள் சொன்னதாவது: "மனசில எதையும் வெச்சுக்க மாட்டார்.. தப்புன்னா அதை உடனே கேட்டுடுவார்.. பக்கத்தில யார் யார் இருக்காங்க, இப்போ சொல்லலாமா? வேணாமா என்ற தயக்கமே இருக்காது.. அப்படியே போட்டு உடைச்சிடுவார்.. எப்பவுமே உண்மையின் பக்கம் நிற்கணும் என்று அட்வைஸ் தந்து கொண்டே இருப்பார்.
வெற்றி... வெற்றி.. என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம்: டிடிவி தினகரன் கண்ணீர்
டிடிவி தினகரன்
வெற்றி.. வெற்றி என்று யாரை இனி உரிமையாக பேசி அழைக்க போகிறேன் என்று தினகரன் சொல்கிறார் என்றால் அந்த அளவுக்கு தினகரன் மீது வெற்றிவேல் நம்பிக்கை வெச்சிருந்தவர்.. அதுக்கு காரணம், ஜெயலலிதாவை ஆர்கேநகரில் வெற்றி பெற வெச்ச மாதிரியே, தினகரனையும் வெற்றி பெற வைத்து ஆபரேஷனை சக்சஸ் செய்து காட்டியதுடன், திமுக, அதிமுகவை அலற வைத்ததுதான்.
வெற்றிவேல்
செந்தில்பாலாஜி கட்சியில் இருந்து போனபோதும் சரி, தங்க தமிழ்செல்வன் போன போதும் சரி, உருக்குலைந்து போயிருந்த தினகரனுக்கு தெம்பாக இருந்தவர் வெற்றிவேல்தான்... ஒருகட்டத்தில் வெற்றிவேலும் இன்னொரு கட்சிக்கு போவதாக கூட செய்திகள் அடிபட்டது.. உடனடியாக வந்து மறுப்பு சொன்னதுடன், தினகரன் மீது கடைசிவரை நம்பிக்கை இழக்காமலேயே இருந்தார்.
அக்கவுண்ட் நம்பர்
யார் உதவின்னு வந்து கேட்டாலும் உடனே செய்துடுவார்.. இந்த கொரோனா நேரத்தில் நிர்வாகிகள் நிறைய பேர் கிட்ட பணம் இல்லை.. "அக்கவுண்ட் நம்பர் குடுய்யா.. பணம் போட்டுவிட்டுடறேன்" என்று உரிமையாக வந்து கேட்டார்.. இவருக்கு உடம்பில் ஏற்கனவே நிறைய பிரச்சனை இருந்தது.
வீடியோ கான்பரன்ஸ்
ஓவர் வெயிட் இருந்ததால், ஏற்கனவே அதுக்கு ஒரு ஆபரேஷன் செய்திருந்தார்.. ஹார்ட் ஆபரேஷனும் நடந்திருக்கு.. இந்த மாதிரி நேரத்தில்தான் மா.செ.க்கள் கூட்டம் நடத்த வேண்டியதா போச்சு.. அதுவும்கூட வீடியோ கான்பரன்ஸில் நடத்திடலாம் என்றுதான் வெற்றிவேல் சொல்லி இருக்கிறார்.. ஆனால், நேரிலேயே கூட்டிடலாம் என்று தலைமை உத்தரவிடவும்தான், ராயப்பேட்டை ஆபீசில் மீட்டிங் நடந்துள்ளது.
மாஸ்க் போடுங்க
தொடர்ந்து 3 நாள் கூட்டம் நடந்ததுலதான் ஏதோ நடந்துடுச்சு போல.. அப்பவே ஜுரம் வந்துடுச்சு.. உடல்நிலை விஷயத்தில் எவ்வளவோ கவனமாக இருந்தும், கடைசி நேரத்தில் இப்படி ஆயிடுச்சு.. இந்த 6 மாசத்துல எந்த மீட்டிங் நடந்தாலும் சரி, முதல்ல மாஸ்க்கை போடுங்கய்யா, ஏன் இப்படி அசால்ட்டா இருக்கீங்கன்னு கண்டிச்சிட்டே இருப்பார்.. அவருடைய கார் டிரைவரைகூட நிறுத்திட்டார்.. இவரேதான் எங்க போனாலும் வண்டியை ஓட்டிட்டு போனார்.. அந்த அளவுக்கு கன்ட்ரோலா இருந்தவருக்கு இந்த கதியா-ன்னுதான் ஆச்சரியமா இருக்கு.
காழ்ப்புணர்ச்சி
ஆனால், விசுவாசம்ன்னா அது வெற்றிவேல்தான்.. அது மூப்பனாரா இருந்தாலும் சரி, சசிகலாவா இருந்தாலும்சரி, டிடிவி தினகரனா இருந்தாலும் சரி.. அந்த விசுவாசம்தான் அவரை கடைசி வரை தாங்கி பிடிச்சது... உண்மையை பேசி பேசியே வாழ்ந்த வித்தியாசமான அரசியல்வாதி.. காழ்ப்புணர்ச்சியால் அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோவை கசிய விட்டாரே தவிர, அப்போதுகூட அவரை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிக்கவில்லை.
சென்ட்டிமென்ட்
புதுசா போன அந்த ராயப்பேட்டை ஆபீஸ் சென்ட்டிமென்ட்டாகவே சரியில்லை.. இதை பத்தி அப்பவே முணுமுணுப்பு இருக்கத்தான் செய்தது.. அந்த ஆபீஸ் போனதில் இருந்தே பிரச்சனை மேல் பிரச்சனை அமமுகவுக்கு வந்துட்டுத்தான் இருந்தது.. இப்படி ஒரு உசுரையே பறிச்சிட்டு போகும்னு நாங்க நினைக்கவே இல்லை.. அமமுகன்னா அது வெற்றிவேல்தான்" என்றனர்.