புதிய விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த வேட்டவலம் மணிகண்டன்... விவசாயிகள் கடும் அதிருப்தி..!
சென்னை: புதிய விவசாய சட்டங்களை திரும்பப்பெறக் கோரி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் சூழலில் தமிழகம், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, பீகார் மாநிலங்களை சேர்ந்த ஒரு சில விவசாய சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தலைநகர் டெல்லியில் வாட்டி வதைத்து வரும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் திரளாக திரண்டு சென்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சுதந்திர இந்தியாவில் இப்படியொரு பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றதில்லை என்ற பெருமையை அவர்கள் ஈட்டியுள்ளனர். 6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொட்டலங்களுடன் வீதியில் இறங்கி தங்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வருகின்றனர். இந்தப் போராட்டம் உலகின் பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
19-வது நாளாக டெல்லியில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அதனை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு வகைகளில் முயற்சி மேற்கொண்டு வருகிறது. பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்று அதிரடியாக புதிய விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவசாய சங்கப் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்து வந்த மத்திய அரசு அவர்களை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்திக்க வைத்தது. மேலும், புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து அவர்களிடம் இருந்து கடிதமும் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதில் தமிழகத்தில் இருந்து விவசாய சங்கத் தலைவரும், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவருமான வேட்டவலம் மணிகண்டனும் இருப்பது தான் குறிப்பிடத்தக்கது. இதனிடையே விவசாயிகள் போராட்டத்தில் அரசியல் நுழைத்து விட்டதாக போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
வேட்டவலம் மணிகண்டன் முடிவு குறித்து கருத்து கேட்பதற்காக தென்னிந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணுவை நாம் தொடர்பு கொண்டோம். அப்போது அவர் கூறியதாவது; ''வேட்டவலம் மணிகண்டன் ஆளுங்கட்சிக்காரர், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இயங்கக் கூடியவர். அதன் காரணமாக அவர் கையெழுத்திட்டிருப்பார். இந்த விவகாரம் குறித்து இன்னும் முழுமையாக நான் அறியவில்லை, அறிந்துகொண்டு பேசுகிறேன்'' எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications