விஜிபி கோல்டன் பீச் 'சிலை மனிதன்' தாஸ்.. இப்போ எப்படி இருக்கார் தெரியுமா? வதந்தியை நம்பாதீங்க மக்களே
சென்னை: மன மகிழ்ச்சிக்காக நாம் செல்லக்கூடிய ஒவ்வொரு இடத்துக்கும், ஒரு ட்ரேட்மார்க் விஷயங்கள் இருக்கும்.
Recommended Video
மெரினா கடற்கரைக்கு போனால் அதன் விரிந்த கடல் உங்களுக்கு நினைவுக்கு வரும்.. ஊட்டிக்கு போனால், பச்சைப்பசேலென்ற புல்வெளிகளும், கொண்டை ஊசி வளைவுகள் உடனே நினைவுக்கு வரும்.
பீச்சுக்கோ அல்லது மலைவாழ் தலங்களுக்கோ செல்லும்போது இப்படி ஒரே மாதிரியான நினைவு வந்து செல்லும்.

தனி அனுபவம்
சென்னை விஜிபி கோல்டன் பீச் சென்றவர்களுக்கு, மட்டும் தனி அனுபவம் கிடைக்கும். வேறு எந்த பொழுதுபோக்கு பூங்காவிலும் இல்லாத 'யூனிக்னஸ்' இங்கு உண்டு. உயரமான ராட்டினங்கள், சுவையான பதார்த்தங்கள் எந்த பொழுது போக்கு பூங்காவில் வேண்டுமானாலும் கிடைக்கலாம். ஆனால் விஜிபி கோல்டன் பீச் என்றால் நினைவுக்கு வருவது சிலை மாதிரி நிற்கக் கூடிய அந்த அசையா மனிதர்தான்.

அசையா மனிதன்
தமிழ்நாட்டில் எத்தனையோ மாவட்டங்களில் வசிக்கக் கூடியவர்கள் தங்கள் உறவினர்களை காணுவதற்கு சென்னை வந்தபோது, 1990களில் தவறாமல் விஜிபி கோல்டன் பீச் சென்றிருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் இந்த அசையா மனிதன்தான். இவரது முன்பாக நின்று கொண்டு குட்டிக்கரணம் அடித்தாலும், கிச்சு கிச்சு மூட்டாத குறையாக காமெடி செய்தாலும், அசையாமல், வாயை திறக்காமல் அப்படியே நிற்பதுதான் இவரது சிறப்பம்சம்.

30 வருடங்களாக பணி
ஒன்றல்ல, இரண்டல்ல, கடந்த 30 வருடங்களாக விஜிபி கோல்டன் பீச் நுழைவாயிலில் அசராமல் நின்று மக்களை வியப்பில் ஆழ்த்தி வரும் இவரது பெயர் தாஸ். தொடர்ந்து விஜிபி நிறுவனம், இவருக்கு ஊதியம் வழங்கி நல்லபடியாக கவனித்து வருகிறது. இந்த நிலையில்தான் இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், இறந்து விட்டதாகவும் சில சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரவி வந்தது.

வீடியோ வெளியிட்ட தாஸ்
இதனால் அதிர்ச்சியடைந்த தாஸ், அவரே பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், எனது பெயர் தாஸ். நான் விஜிபியில் சிலை மனிதனாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் நான் இறந்து விட்டதாக சிலர் வதந்தி கிளப்பி விட்டுள்ளனர். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்பட்டதும், நீங்கள் வந்து என்னை பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அனேகமாக இந்த வீடியோ மூலமாக தான் முதல் முறையாக அவர் குரலை பலரும் கேட்டிருக்க முடியும் என்பது சிறப்பு.

பூங்கா திறக்கும்
தற்போது ஊரடங்கு காலத்தையொட்டி, விஜிபி பொழுதுபோக்கு பூங்கா திறக்கப்படாமல் இருக்கிறது. பூங்கா திறக்கப்பட்டதும் உங்களது மனம் கவர்ந்த 'சிலை மனிதன்' தாஸ்சை நீங்கள் மறுபடியும் பார்த்து மகிழ முடியும் மக்களே. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம்.












Click it and Unblock the Notifications