நயன்தாரா காட்சிக்காக பல ரீடேக் எடுத்த விக்னேஷ் சிவன்.. தனுஷ் தரப்பில் ஹைகோர்ட்டில் பரபரப்பு வாதம்
சென்னை: நயன்தாரா காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக விக்னேஷ் சிவன் பலமுறை 'ரீடேக்' எடுத்து நஷ்டத்தை ஏற்படுத்தினார் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தனுஷ் தரப்பு வாதிட்டுள்ளது. இந்த வழக்கு இறுதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தனுஷ் தரப்பு வாதம் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் தங்கள் திருமண ஆவணப் படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. மேலும், நடிகை நயன்தாராவிடம் ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில், நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நயன்தாரா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'ஆவணப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெறவில்லை என்றும், எனவே, ஆவணப்படத்தில் அந்த காட்சிகளை பயன்படுத்தியதில் தவறில்லை. அதனால், இழப்பீடு வழங்க தேவையில்லை'' என்ற வாதத்தை முன்வைத்தார் .
தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நயன்தாரா காட்சி நன்றாக வரவேண்டும் என்பதற்காக பல ரீடேக் எடுத்து நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக வாதிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வைத்த வாதம் வருமாறு:- ''நயன்தாராவின் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்ட காட்சிகள் 'நானும் ரெளடிதான்' படத்தில் இடம்பெறவில்லை என்றாலும் , அந்த காட்சிகளை வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனம்தான் படமாக்கியுள்ளது.
எனவே, எங்களது முன்அனுமதி இல்லாமல் நானும் ரெளடிதான் படத்தின் காட்சிகளை நடிகை நயன்தாராவால் பயன்படுத்த முடியாது. இயக்குநர் விக்னேஷ் சிவன், நானும் ரெளடிதான் படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளை நயன்தாராவை மையப்படுத்தியே எடுத்துள்ளார். பிற நடிகர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். நடிகை நயன்தாராவின் காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக பலமுறை ரீடேக் செய்து காட்சிகளை விக்னேஷ் சிவன் எடுத்து இருக்கிறார்.
இதனால், தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது'' என்ற வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து, இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கில் தனுஷ் தரப்பில் வாதங்கள் தற்போது வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications