பாகிஸ்தானுக்கு நான் ஆதரவா? என் பதிவு தவறாக புரிந்து கொண்டோர் கவனத்திற்கு! விஜய் ஆண்டனி மறுபதிவு
சென்னை: என் பதிவு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என காஷ்மீர் பஹல்காம் குறித்து தான் போட்ட போஸ்டிற்கு நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: என் பதிவை தவறாக புரிந்து கொண்டவர்கள் கவனத்திற்கு, காஷ்மீரில் நடந்த கொடும் படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம், நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நம் வலிமையான கரங்களால் நம் இறையாண்மையை பாதுகாப்போம். இவ்வாறு விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.
— vijayantony (@vijayantony) April 28, 2025
நேற்றைய தினம் அவர் வெளியிட்டிருந்த பதிவில் காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும் பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்களும் நம்மைப் போல அமைதியையும் மகிழ்ச்சியையும் மட்டுமே விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி பலர் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். இதற்குதான் விஜய் ஆண்டனி மறு பதிவின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்கு பலர் சுற்றுலா சென்றனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி எடுப்பதால் மக்கள் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுக்கிறார்கள். அந்த வகையில்தான் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர் என குட்டி ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காம் சென்றனர்.
கடந்த 22 ஆம் தேதி பஹல்காமின் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்த போது பயங்கரவாத தாக்குதல் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இந்தியாவைச் சேர்ந்த 25 பேரும் நேபாள நாட்டவர் ஒருவரும் என 26 பேர் பலியாகிவிட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதிலடியாக இந்திய அரசு, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துவிட்டது. இதனால் பாகிஸ்தானில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் , விவசாயம் பாதிக்கும், நீர் மின் நிலையங்களுக்கு தண்ணீர் இல்லாமல் மின்சார பற்றாக்குறையும் ஏற்படும். அது போல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் விஜய் ஆண்டனி தனது எக்ஸ் வலைதளங்களில் கருத்து பதிவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications