Exclusive: விஜய்யை பார்த்தா சிரிப்புதான் வருது.. திமுகவை வீழ்த்த முடியாது.. தமிழருவி மணியன் சுளீர்!
சென்னை: "விஜய்யால் திமுகவை வீழ்த்த முடியாது, ஒருபக்கம் பிரசாந்த் கிஷோர், மறுபக்கம் மார்ட்டின் மருமகன் என்றால், விஜய் நடத்தும் அரசியல் கட்சி எந்த திசை நோக்கிச் செல்லப்போகிறது என்பதை இப்போதே புரிந்துகொள்ள முடிகிறதே.." என தமிழருவி மணியன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. தவெக தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்ந நிகழ்ச்சியில் பேசிய பிரசாந்த் கிஷோர், "வாரிசு அரசியல், ஊழல், ஜாதி வேறுபாடு எல்லாம் தான் இப்போது உள்ள தமிழ்நாடு மாடல்." எனப் பேசினார்.

இந்நிலையில், காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனர் தமிழருவி மணியன் நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில், "தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டதன் நோக்கமே, திமுகவை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். அதேசமயம் திமுகவை மட்டும் சொன்னால் போதாது, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவையும் விமர்சித்தால் தான் சிறுபான்மை வாக்காளர்களை கவர முடியும், எனவே பாஜகவை எதிர்த்துப் பேசி வாக்குகளை வசீகரிக்க முயன்றுள்ளார்.
திமுக ஆட்சியில் இருக்கிறது, அக்கட்சி ஆட்சியில் இருந்து வீழ்த்தப்பட்டால் தான் ஆட்சி அமைக்க முடியும். எனவே விஜய் இரு கட்சிகளையும் தாக்கிப் பேசுகிறார். திமுகவும், பாஜகவும் சேர்ந்து நாடகமாடுகிறார்கள் எனச் சொல்வது புதிதல்ல, அதனையே இப்போது விஜய் சொல்கிறார். தமிழ்நாட்டில் நடப்பது அரசியல் நாடகம், நடிகர்கள் மாறுவார்கள், மேடை மாறுவதில்லை.
விஜய்யின் அரசியல் பிரவேசத்தை கொள்கை ரீதியாகத்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர, அவர் நடிகர் என்பதற்காக தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவது எந்தவகையிலும் மேலான அரசியல் அல்ல. இதை கருணாநிதியே செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது, நடிகரின் கட்சி என்றுதான் விமர்சித்தார். மலையாளிக்கு வாக்களிக்கலாமா எனக் கேள்விக் கணைகளை எழுப்பியவர் தான் கருணாநிதி.
விஜய்யின் பொருளாதாரக் கொள்கை என்ன? பாஜகவின் பொருளாதாரத் திட்டம் எப்படி நகர்ந்திருக்கிறது? ஏழை மக்கள் ஒருபக்கம் சிதைந்து கொண்டிருப்பது பற்றி விஜய் சிந்தித்திருக்கிறாரா? என்பது தான் முக்கியம். பிரசாந்த் கிஷோர் எல்லாம் முக்கியம் கிடையாது. ஒரு மாநிலத்தில் ஒரு கட்சிக்கு எதிரான வெறுப்பலை வீசுவதை ஒரு பாமரன் கூட கண்டுகொள்ள முடியும். பிரசாந்த் கிஷோரால் தான் திமுக வெற்றி பெற்றது என்றெல்லாம் கிடையாது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நிலை வெளிப்படையாகத் தெரிந்தது. அந்தநேரத்தில் ஸ்டாலின் பக்கம் வந்து நின்றுகொண்டு வியூகம் அமைத்தார்.
பிரசாந்த் கிஷோர் அவ்வளவு பெரிய வியூக வகுப்பாளர் என்றால், பீகாரில் அவரது கட்சி எங்காவது டெபாசிட்டை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. தனது சொந்த மாநிலத்தில் சொந்தக் கட்சியையே டெபாசிட் வாங்க வைக்க முடியாத பிரசாந்த் கிஷோர், அமைத்த வியூகத்தின் மூலமாக திமுகவை வீழ்த்த முடியுமா?
திமுகவை ஊழல் கட்சி எனச் சொல்லும் பிரசாந்த் கிஷோர் தானே 2021ல் திமுக ஆட்சிக்கு வர வியூகம் அமைத்துக் கொடுத்தவர். யாராவது கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுத்தால் அவருடைய மூலம் என்னவென்றே அறியாமல் வந்து அவர்களுக்காக தேர்தல் வியூகம் அமைத்துக் கொடுப்பவரை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கப் போகிறாரா?
ஊழல் மனிதர்களை அகற்றப் புறப்படுகிற விஜய், அந்த ஊழல் மனிதர்கள் ஆட்சிக்கு வருவதற்கு உதவியதாக கருதப்படுகிற பிரசாந்த் கிஷோரையே தனது ஊழல் வியூக வகுப்பாளராக வைத்துக்கொண்டு அரசியல் செய்யப்போகிறாரா? ஆதவ் அர்ஜுனா, லாட்டரி மார்ட்டினின் மருமகன் என்பதுதானே அவரது முகவரி. சிக்கிம் லாட்டரி மோசடி வழக்கில் சிக்கிய மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடப் போகிறாரா? அவர் என்ன தியாகியா?
ஒருபக்கம் பிரசாந்த் கிஷோர், மறுபக்கம் மார்ட்டின் மருமகன் என்றால், விஜய் நடத்தும் அரசியல் கட்சி எந்த திசை நோக்கிச் செல்லப்போகிறது என்பதை இப்போதே புரிந்துகொள்ள முடிகிறதே.. ஊழல் அற்ற ஆட்சியாக அது இருக்குமா? இதையெல்லாம் பார்த்தால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications