நான் அவங்களுக்கெல்லாம் அண்ணன் சார்.. தலைவர் கடிதத்தை விநியோகித்த தவெக நண்பீஸ் கைது! கொந்தளித்த விஜய்
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து மாணவிகள் தைரியமாக இருக்க வேண்டும் எனவும், அவர்களுடன் உடன் நிற்பதாக நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தை தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணியினர் அனுமதி இன்றி கல்லூரி மாணவிகளுக்கு விநியோகித்ததாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அமைதியாக போராடிய தங்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்ததற்கு காவல்துறையினருக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை வெளியிட்டார்.
விஜய் கடிதம்:
அந்த கடிதத்தில்,”அன்புத் தங்கைகளே! கல்வி வளாகம் முதற்கொண்டு, ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்லொணா வேதனைக்கும் ஆளாகிறேன்.
பெண்கள் பாதுகாப்பு:
யாரிடம் உங்கள் பாதுகாப்பைக் கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்கள் எத்தனை முறை கேட்டாலும் எந்தப் பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இக்கடிதம். எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் அண்ணனாகவும், அரணாகவும். எனவே எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள். பாதுகாப்பான தமிழகத்தைப் படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் அனைவரும் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என கூறியிருந்தார்.

தவெக மகளிரணியினர் கைது:
இதனை அடுத்து தமிழக வெற்றி கழகத்தின் மகளிரணியினர் இந்த கடிதத்தின் நகல்களை தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவிகளிடமும் பொதுமக்களிடமும் வழங்கினர். அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகித்ததாக அந்த கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களை சந்திக்க சென்ற கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கைது செய்யப்பட்ட நிலையில் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
விஜய் கண்டனம்:
இந்நிலையில், தவெகவினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்துக்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்களுடன் உறுதியாக நிற்பேன்:
இச்சூழலில், தமிழகத்துத் தங்கைகளுக்கு இன்று நான் எழுதிய கடிதம் வெளியிடப்பட்டது. அதில், "எல்லாச் சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் உறுதியாக நிற்பேன், அண்ணனாகவும், அரணாகவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இக்கடிதத்தின் நகல்களைத் தமிழகம் முழுவதும் பொதுமக்களிடமும் பெண்களிடமும் த.வெ.க. மகளிரணியினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வழங்கியுள்ளனர்.
காவல்துறைக்கு கண்டனம்:
சென்னையில் பொதுமக்களிடம் இந்த நகல்களை எம் கட்சித் தோழர்கள் வழங்கவிடாமல் தடுத்த காவல் துறையினர், அவர்களைக் கைது செய்து, பின்னர் விடுவித்துள்ளனர். ஜனநாயக வழியில் பிரசுரங்களை விநியோகம் செய்ய முயன்றதற்காக அவர்களைக் கைது செய்தது கண்டனத்துக்கு உரியது. கருத்துரிமை, பேச்சுரிமை அடிப்படையில், யாருக்கும் தொந்தரவு இல்லாமல் அறவழியில் மக்களைச் சந்தித்த எம் கட்சித் தோழர்களைக் கைது செய்வது தான் ஜனநாயகமா? இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மக்கள் வெகு காலம் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்.” என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications