விஜய்க்கு காத்திருக்கும் விஷப் பரிட்சை..ஆட்சியமைக்க அழைப்பாரா ஆளுநர்! சசிகலா சம்பவம் நியாபகமிருக்கா?
சென்னை: தமிழக அரசியல் களம் பரபரத்துக் கிடக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது தமிழக வெற்றிக் கழகம். இந்த நிலையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார் விஜய். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க இரு வாரங்கள் அவகாசமும் கேட்டிருக்கிறார். இந்த நிலையில் சசிகலாவுக்கு வந்தது போல விஜய்க்கும் சில விஷ பரீட்சைகள் வைக்கப்படலாம் என்கின்றனர் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக அரசியல் களம் தற்போது மிகுந்த பரபரப்பில் உள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் முழு தீவிரத்துடன் இறங்கியுள்ளார் விஜய்.

234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால், இந்தத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால், பெரும்பான்மை பெற இன்னும் 10 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகியுள்ளது.
விஜய்
இந்த குறையை ஈடு செய்யும் வகையில் தவெக கட்சி தரப்பில் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில், ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரி விஜய் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை அணுகியுள்ளார். அவரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளதுடன், தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்றும், பெரும்பான்மையை நிரூபிக்க இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் முதல்வர்
இதற்கிடையில், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. சட்டமன்றக் கட்சி தலைவராக விஜய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், அவர் முதலமைச்சர் பதவிக்கான அதிகாரப்பூர்வ வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தவெக பெரும்பான்மை
இந்த கூட்டத்துக்கு முன்னதாக கட்சியின் கொள்கை தலைவர்களான அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு விஜய் மரியாதை செலுத்தினார். கூட்டத்துக்கு பின் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளன. அவர்களை கண்காணிக்க பெரும்படையே களத்தில் உள்ளதாம். இது ஒருபுறம் இருக்க பெரும்பான்மை நிரூபிக்க தேவையான ஆதரவை பெறுவதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சிறிய கட்சிகள் ஆதரவு
குறிப்பாக சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் அமைதியாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. யார் ஆதரவு தரப் போகிறார்கள் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
விஜய்க்கு பெரும் சிக்கல்
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என தேர்தலுக்கு முன்பே விஜய் அறிவித்த நிலையில் எந்த கட்சியும் அவருடன் கூட்டணிக்கு செல்லவில்லை. இந்த நிலையில் விஜய் பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கும் நிலையில் அவருடன் கூட்டணி சேர எந்த கட்சி ஆர்வம் காட்டப் போகிறது என்ற தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் தான் விஜய்க்கு பெரும் சிக்கல் ஒன்று காத்திருக்கிறது.
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்
தமிழகத்துக்கு இன்னும் ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில் கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தான் தமிழகத்துக்கும் பொறுப்பு ஆளுநராக இருக்கிறார். தற்போது விஜய் அவரை சந்தித்து பேசுவதில் தாமதம் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. காரணம் கேரளா சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அங்கு ஆட்சி அமைப்பது பதவியேற்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஆளுநர் கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது.
சசிகலா சம்பவம்
அதே நேரத்தில் தமிழகத்திலும் அவர் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. இதனால் விஜய்க்கு சிக்கல் தான் என்கின்றனர். 2016 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வர் பதவியை பெற தீவிரமாக முயன்றார் சசிகலா. ஆனால் ஆளுநர் இழுத்தடித்ததால் சசிகலா பதவியேற்க முடியாமல் போனது. அதற்குப் பிறகு நீதிமன்ற தீர்ப்பு காரணமாக அவர் சிறை சென்ற நிலையில் தற்போது வரை முதல்வர் பதவி அவருக்கு கனவாகவே போனது. இந்த நிலையில் விஜய்க்கும் அதுபோல சில விஷ பரிட்சைகள் வைக்கப்படலாம் என்கின்றன தமிழக அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications