அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக கட்சி மேலிட தலைவர்களிடம் அண்ணாமலை இன்று கூறியுள்ள நிலையில் அவரது புதிய கட்சி தொடங்குவதன் பின்னணியில் தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் கொடுத்த மிகப்பெரிய நம்பிக்கை தான் உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 'டாக் ஆப் தி டவுன்' ஆக இருக்கிறார் அண்ணாமலை. தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் தலைவரான இவர் கடந்த 7 ஆண்டுகளாக அந்த கட்சியில் செயல்பட்டு வருகிறார். பாஜக மாநில தலைவராக வலம் வந்த அவர் கடந்த ஆண்டு பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

vijay-gives-hope-how-did-annamalai-inspiration-from-tamil-nadu-cm-and-tvk-chief-vijay-details-here

தற்போது சட்டசபை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. பாஜக போட்டியிட்ட 28 தொகுதகிளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த அதிர்ச்சியில் இருந்து மீட்டு வருவதற்குள் தான் பாஜக மேலிடத்துக்கு இடியை இறக்கி உள்ளார் அண்ணாமலை.

பாஜகவில் விலகும் அண்ணாமலை

ஆம், ''நான் பாஜகவில் இருந்து விலகி கொள்கிறேன். நான் எனக்கென்று தனிப்பாதையை அரசியலில் உருவாக்க நினைக்கிறேன். என்னை நம்பி கட்சியில் மாநில தலைவர் பதவி கொடுத்ததற்கு நன்றி'' என்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பாஜக அமைப்பு செயலாளர் சந்தோஷ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை டெல்லியில் சந்தித்து கூறியுள்ளார் அண்ணாமலை. தமிழக பாஜக தேர்தல் தோல்வியில் தத்தளித்து வரும் நிலையில் அண்ணாமலையின் இந்த முடிவு மேலிடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

புதிய அரசியல் கட்சி

தற்போது அண்ணாமலையை சமாதானம் செய்யும் முயற்சியில் மேலிட தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதில் அண்ணாமலைக்கு முக்கிய இடம் உண்டு. 'என் மண்.. என் மக்கள்' என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சியை வளர்த்தார்.

ஆனால் அவரது உழைப்புக்கு பாஜக மேலிடம் அங்கீகரிக்கவில்லை. சட்டசபை தேர்தல் நெருங்கிய நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்காக அண்ணாமலையை பாஜக தலைவர் பதவியில் இருந்து மேலிடம் நீக்கி நயினார் நாகேந்திரனை அந்த பொறுப்பில் அமர வைத்தது. அதிமுக கூட்டணியை அண்ணாமலை விரும்பாத நிலையில் இது நடந்தது. இதனால் அண்ணாமலை விரக்தியடைந்த நிலையில் தற்போது பாஜகவில் இருந்து விலகி புது கட்சி தொடங்கும் முடிவில் அண்ணாமலை உள்ளார்.

விஜய் கொடுத்த நம்பிக்கை

அண்ணாமலையின் இந்த திடீர் முடிவுக்கு பின்னணியில் தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் கொடுத்த நம்பிக்கையில் தான் அண்ணாமலை பாஜகவிற்கு 'குட்பை' சொல்லி தனி கட்சி எனும் ரூட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி என்ன அண்ணாமலைக்கு, விஜய் நம்பிக்கை கொடுத்தார்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

வரலாற்றை மாற்றிய விஜய்

அதாவது தமிழகத்தை எடுத்து கொண்டால் கடந்த 1967 ம் ஆண்டு முதல் திமுக, அதிமுக என்று இரு திராவிட கட்சிகளும் தான் மாறி மாறி ஆட்சியை பிடித்தன. 1967 காலக்கட்டத்தில் காங்கிரஸ் பலமாகவே இருந்தாலும் கூட அந்த கட்சியால் ஒருமுறை கூட மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 60 ஆண்டு வரலாற்றை விஜய் மாற்றி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கி 2 ஆண்டுகளே ஆன நிலையில் தற்போது விஜய் தமிழக முதல்வராகிவிட்டார். 60 ஆண்டுகளாக திமுக, அதிமுக எனும் திராவிட கட்சிகள் மாறிமாறி ஆட்சியை பிடிப்பதை மாற்றி சாதித்துள்ளார். இதனால் 2031ம் ஆண்டு சட்டசபை தேர்தலை மனதில் வைத்து கட்சி தொடங்கி அனைவரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் நல்ல எதிர்காலம் இருக்கும் என அண்ணாமலை நம்புகிறார்.

பணபலம் - ஜாதி பலம் இன்றி வெற்றி

குறிப்பாக சட்டசபை தேர்தலில் விஜய்யின் வெற்றி என்பது பணபலம் அல்லது ஜாதி பலத்தை கடந்து அரசியலில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார். பணபலம், ஜாதிபலம் இன்றி பல இளைஞர்கள் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புவதோடு, அந்த மாற்றத்தை கொண்டு வரும் வகையிலான தலைவர்களை ஆதரிக்க தயாராகவே இருக்கின்றனர். இதனை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அண்ணாமலை தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் தான் "இன்ஸ்பிரேஷன்"

இப்படியாக விஜய்யின் செயல்பாடு அண்ணாமலைக்கு தனி கட்சி உருவாக்குவதற்கு 'இன்ஸ்பிரேஷனாக' உள்ளதாக அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் மாற்றத்தை விரும்பி தவெகவில் இணைய விரும்பியபோது விஜய்யின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

இதனால் இப்போது கட்சி தொடங்கினால் அவர்கள் நம்முடன் கைகோர்க்கலாம். இதன்மூலம் அடுத்த 2 ஆண்டுகளில் தீவிரமாக களமாடி தமிழக அரசியலில் புதிய சக்தியாக உருவாக முடியும் என்று அண்ணாமலை திட்டமிட்டு காய்நகர்த்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+