கிளாம்பாக்கத்தை குறிவைத்த விஜய்.. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! ஆனா ஒரு வருடம் 'டிலே'!
சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளின் வளர்ச்சிக்கும் போக்குவரத்த எளித்தாக்கும் விதமாக தமிழக அரசு கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து செட்டிபுண்ணியம் வரை மெட்ரோவை நீட்டிக்கும் திட்டத்துக்கு கடந்த டிசம்பரில் கொள்கை அளவிலான அனுமதியை அளித்திருந்தது. இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர மேலும் ஒரு ஆண்டு தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது.
இதற்கு முக்கியமான காரணம் விஜய் தலைமையிலான தவெக அரசு எடுத்த முடிவு தான். இந்த பாதையில் மெட்ரோ ரயிலையும், ஆறு வழிச்சாலை மேம்பாலத்தையும் ஒரே இரட்டை அடுக்கு (Double-Decker Viaduct) அமைப்பில் உருவாக்க தமிழக அரசு புதிய யோசனையை முன்வைத்துள்ளது. இதற்காக மொத்த திட்டத்தையும் மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது. ஏன் இந்த திடீர் மாற்றம்..?

மெகா திட்டம்
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து (KCBT) செட்டிபுண்ணியம் வரை 18.4 கிலோமீட்டர் மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது ஜிஎஸ்டி சாலையில் இறங்கும் வகையில் இருக்கும். இந்த திட்டத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசு கொள்கை அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால் தற்போது இந்த திட்டத்தில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) உடன் இணைந்து இரட்டை அடுக்கு வழித்தடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
ஏன் தாமதம்?
விஜய் தலைமையிலான தமிழக அரசு, முன்பு மெட்ரோ திட்டம் மட்டுமே செயல்படுத்த திட்டமிட்டு இருந்த நிலையில், தற்போதைு கீழ் அடுக்கில் 6 வழி நெடுஞ்சாலையும், மேல் அடுக்கில் மெட்ரோவும் இயங்கும் வகையில் ஒருங்கிணைந்த வடிவமைப்பை தயாரிக்க தமிழக அரசு தேசிய நெடுஞ்சாலை துறையை கேட்டுள்ளது. இதனால் முன்பே தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை (DPR) முழுவதும் மாற்றி அமைக்க வேண்டியுள்ளது.
முன்பு தயாரிக்கப்பட்ட DPR-இல் உள்ள தூண்களின் சுமை தாங்கும் திறன் இப்போது மாற்றி வடிவமைக்கப்பட வேண்டும். ஏனெனில் இப்போது அதே தூண்கள் நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோ இரண்டையும் தாங்க வேண்டும். இதற்கான வடிவமைப்பு பணி சுமார் 5 மாதங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செலவு பகிர்வு மறு ஆய்வு
NHAI மற்றும் தமிழக அரசுக்கு இடையிலான செலவு பகிர்வு முறையும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். இந்த மறு ஆய்வு முடிந்த பிறகுதான் தமிழக அரசின் பங்கு எவ்வளவு என்பது தெரிய வரும். இந்த செயல்முறை முடியும் வரை திட்டத்தின் இறுதி வடிவமைப்பு நிறைவு பெறாது.
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், முகலிவாக்கம் - ராமாபுரம் பகுதியில் செய்தது போல, நெடுஞ்சாலை மற்றும் மெட்ரோவை ஒரே நேரத்தில் கட்டுவது சிறந்தது என்று கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், மெட்ரோ திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி தேவைப்படுவதால், அதற்கு கூடுதல் நேரம் ஆகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த இரட்டை அடுக்கு வழித்தடம் அமைக்கப்பட்டால், எதிர்காலத்தில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும். அதே நேரத்தில் மெட்ரோவும் இயங்கும். ஆனால் இந்த ஒருங்கிணைந்த திட்டம் தாமதமாவதால், சென்னை புறநகர் பகுதிகளில் விரைவான போக்குவரத்து வசதி கிடைக்க இன்னும் காலதாமதம் ஏற்படும்.
தற்போது NHAI இரு வழிகளிலும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. நெடுஞ்சாலையை முதலில் கட்டி, பின்னர் மெட்ரோவை கட்டுவது அல்லது இரண்டையும் ஒரே நேரத்தில் கட்டுவது போன்ற திட்டங்களுக்கும் ரெடியாக உள்ளது. இருப்பினும், தமிழக அரசின் இறுதி முடிவு வரும் வரை திட்டத்தின் வேகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications