விஜய் சிஎம் ஆகப்போறாரு.. ஆளுநர் அழைக்கும் முன்பே கொண்டாடி தீர்க்கும் தவெக தொண்டர்கள்!
சென்னை: பெரும்பான்மை கிடைத்துவிட்டதால் விஜய் முதல்வர் ஆவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது. இதனால் தவெகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை பனையூர் அலுவலகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் தவெக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகிறார்கள். இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கியும் உற்சாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விஜய் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த சடுகுடு ஆட்டம் தமிழக அரசியலை தாண்டி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது என சொல்லலாம். காலையில் ஆதரவு, மாலையில் ஆதரவு இல்லை என அரசியல் கட்சிகள் விஜய்க்கு கண்ணாமூச்சு காட்டியதாலும், கடந்த 3 நாட்களாகவே விஜய் பதவியேற்பாரா? இல்லையா? என தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

கொண்டாடும் தவெகவினர்
விஜய் ரசிகர்கள் மற்றும் தவெகவினரும் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகத்துக்கு தயாராகி வரும் நிலையில் மீண்டும் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என தகவல் வந்ததும் அப்செட் ஆகிவிடுவார்கள். இப்படி கடந்த மூன்று நாட்களாக நொடிக்கு நொடி பரபரப்புடன் தமிழக அரசியல் களம் நகர்ந்துகொண்டு இருந்தது. பெரும்பான்மை இல்லை என்பதால் தான் ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை என கூறப்பட்டது.
இந்த நிலையில் இன்று மாலையில் விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறின. இதனால் விஜய்க்கு பெரும்பான்மை 120 ஆக கிடைத்தது. விசிக ஆதரவு கொடுத்த உடனேயே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தவெகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டர்கள் பனையூர் கட்சி அலுவலகம் அருகேயும் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம்

மேலும் விஜய் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளதாகவும் வெளியான தகவல் தவெகவினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. டிரம்ப்ஸ், மேளம் கொட்டியும் சில இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. கரூரில் தவெக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டன. டிவிகே.. டிவிகே என உற்சாகத்துடன் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.
தவெகவுக்கு தற்போது காங்கிரஸ் (4), கம்யூனிஸ்ட் சிபிஐ (2), சிபிஎம் (2), VCK (2), UML(2) என மொத்தம் 120 ஆக பெரும்பான்மை உயர்ந்தது. இதனால் விஜய் மீண்டும் 4 வது முறையாக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். பெரும்பான்மை இல்லை என்று கூறி வந்ததாலேயே விஜய் பதவியேற்பு தள்ளிப்போய் வந்த நிலையில் இன்று கூட்டணி கட்சி தலைவர்களுடம் விஜய் ஆளுநரை நேரில் சந்தித்தார். இதனால் இன்று இரவே விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆளுநர் அழைப்பு விடுத்தால் நாளை மாலை 3 மணியளவில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் விஜய் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது.
பட்டாசு விற்பனை அதிகரிப்பு
இதனால் தவெகவினர் பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கட்சி கொடிகளை ஏந்திய தொண்டர்கள் உற்சாக முழக்கங்கள் எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எப்போது வேண்டுமானாலும் விஜய்க்கு ஆளுநர் அழைப்பு விடுக்கலாம் என்பதால் பட்டாசுகளை அதிக அளவில் தவெகவினர் வாங்கி வைத்துள்ளனர்.
விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாதவர்கள் வீடுகள் மற்றும் தவெக அலுவலகங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட இருப்பதால் பட்டாசுகளை வாங்கி குவித்து வருகின்றனர். இதனால் பட்டாசு விற்பனையும் அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.














Click it and Unblock the Notifications