விஜய்க்கு சிக்கல்! மாமல்லபுரம் ஐடியா யார் கொடுத்தது தெரியுமா? சஸ்பென்ஸ் உடைத்த விசிக நிர்வாகி
சென்னை: கரூர் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் தொடர்ந்து தவறு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களை மாமல்லபுரத்திற்கு வரவழைத்து பார்ப்பது என்பது தவறான விஷயம். விஜய்க்கு ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் தவறாக வழிநடத்துகிறார்கள் என விசிக நிர்வாகி சங்கத் தமிழன் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளர் சங்கத் தமிழன், ஒன் இந்தியா தமிழ் அரசியல் எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுக அழித்து ஒழிக்கப்படும் என்பதுதான் உண்மை. ஏனென்றால் பாஜகவின் சுபாவமே அப்படித்தான்.
எந்த மாநிலத்திற்கு போனாலும் அங்கு வலுவிழந்த மாநில கட்சியுடன் சவாரி செய்வதுதான் பாஜகவின் வேலை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பத் தகுந்தவராக இருந்த ஓபிஎஸ், பாஜகவை நம்பி சென்றதால் அவர் எந்த நிலையில் இருக்கிறார் என்பது மக்களுக்குத் தெரியும்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததாலேயே தொண்டர்கள் மிகவும் மனம் உடைந்து போய்விட்டார்கள். அதிமுக கூட்டணி ஜெயித்துவிடுமோ என்ற பயமெல்லாம் எங்களுக்கு இல்லை. ஏனென்றால் அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால் அக்கட்சி ஆட்சிக்கு வராது. விசிக எந்த கூட்டணியில் இருக்கிறதோ அந்த கூட்டணி வெற்றி பெறும்.
எங்களுக்கு இருக்கும் டிமான்ட்டை வைத்து 10, 12, 25 சீட்டுகளை கூட திமுகவிடம் கேட்போம். நாங்கள்தான் கேம் சேஞ்சர்! எங்களுக்காக எடப்பாடி பழனிசாமியே காத்திருந்தார். ஆனால் அந்த கூட்டணிக்கு சென்றால் சரிப்பட்டு வராது என்பதால் நாங்கள் போகவில்லை. இதனால் பாஜகவுடன் அவர்கள் போய்விட்டார்கள்.
விசிக எந்தளவுக்கு முக்கியம் என்பது திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தெரியும், தொண்டர்களுக்குத் தெரியும். தமிழகத்தை பொருத்தமட்டில் ஒரு கூட்டணியில் பாஜக வந்துவிட்டாலே சிறுபான்மையின மக்களின் ஓட்டு கிடைக்காது, தலித் ஓட்டுக்களும் கிடைக்காது. இவர்களின் வாக்குகளே 13 சதவீதம் இருக்கிறது. இவர்கள்தான் ஒரு தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற சக்தி.
அதிமுக, பாஜகவுடன் செல்வதில்தான் எங்களுக்கு பிரச்சினை. அதாவது மதவாத கட்சிகள் தமிழகத்திற்குள் வந்துவிட்டால் அது தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுகவை அழித்துவிட்டு பாஜக காலூன்றும் நிலை வந்துவிடும்.
ஆனால் அதிமுக தவெகவுடன் சேர்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. விஜய் எந்த இடத்திலும் தான் ஒரு மதவாதி என்பதை காட்டியதில்லை. அவரது செயல்பாடுகளில்தான் சிக்கலே தவிர மற்றபடி அவர் யாருக்கும் அச்சுறுத்தல் கிடையாது.
தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் விளக்குகளை ஆப் செய்து ஆன் செய்ததிலிருந்தே அவர் இன்னும் அரசியல் தலைவராக மாறவில்லை என்பது தெரிகிறது. அப்படிப்பட்ட விஜய், பாஜக பக்கம் போகாமல் இருக்க வேண்டும். அப்படி போனால் சிக்கல்தான்.
திமுக வெர்சஸ் தவெக என இருக்கும் என்பது டிடிவி தினகரனின் ஆசை. எனக்கு கூட திருமாவளவன் முதல்வராக வேண்டும் என்பது ஆசை. ஆனால் நம் ஆசை நடைமுறைக்கு சாத்தியமா என்பதை பார்க்க வேண்டும்.
நடிகர்களுக்கு அதிகபட்சம் 10 முதல் 12 சதவீதம் வாக்குகள் கிடைக்கும். அதற்கு மேல் போக வாய்ப்பில்லை. எனவே தினகரன் ஆசைப்படலாம், ஆனால் விஜய் முதல்வராவார் என்பதெல்லாம் நடக்காது. எனவே உண்மையான போட்டி திமுகவா அதிமுகவா என்பதுதான்.
கரூர் சம்பவத்தில் யார் குற்றவாளி என்பது யாருக்கும் தெரியவில்லை. அவரவர் மனசாட்சிக்குத்தான் தெரியும். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக தவெக உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்கணும்.
மக்களை சந்திக்காமல் பாதியிலேயே ஓடி வந்துவிட்டார்கள். ஆனால் விசிகவினர் நேராக அந்த 41 பேரின் குடும்பத்தினரை சந்தித்து தலா ரூ 50 ஆயிரம் நிதியுதவி அளித்தோம். பணம் பெரிதல்ல. ஆனால் இறந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து இரங்கல் தெரிவித்தோம்.
இறந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வது என்பது அவர்களின் வீட்டிற்கோ அல்லது அவர்கள் இருக்கும் இடத்திற்கோ சென்றுதான் கேட்க வேண்டும். அதுதான் தமிழர் பண்பாடு. ஆனால் விஜய் , பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்திற்கு வரவழைக்கிறார். இது பாராட்டுதலுக்குரிய விஷயம் இல்லை. அரசே அனுமதி கொடுக்காவிட்டாலும் சம்பவ இடத்திற்கு விஜய் போயிருக்கணும். இதுதான் ஜனநாயகம். இதையே அவரால் செய்ய முடியவில்லை என்றால் அவருக்கு நிர்வாகத் திறமை இல்லை என்றுதானே அர்த்தம்.
"விஜய் நல்லவர்தான், அவரை சுற்றியிருக்கும் டீம் சரியில்லை. விஜய்க்கு அரசியல் அனுபவமில்லை" என விஜய்க்கு நெருக்கமான ஒருவர் என்னிடம் சொன்னார். விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பேட்டி கூட நான் பார்த்தேன். அவரும் தன்னை சுற்றி சரியில்லாத நபர்களை விஜய் வைத்திருப்பதாகவே சொன்னார். இவ்வாறு சங்கதமிழன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications