ஐடி விங்கை வலுப்படுத்தும் விஜய் மக்கள் இயக்கம்! நாடாளுமன்றத் தேர்தலுக்கு குறி? பரபரக்கும் ரசிகர்கள்!
சென்னை: விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியை வலிமைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று அதற்கான ஆலோசனைகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றன.
விஜய் மக்கள் இயக்கத்தின் ஐடி விங் நிர்வாகிகளோடு அவ்வியக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துரையாடி இருக்கிறார்.
என்னப்பா நடக்குது இங்க...!! பள்ளிக்கூடத்தில் இப்படியா..??மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்
விஜய் மக்கள் இயக்கம்
ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் மக்கள் இயக்கத்தினர் பல இடங்களில் திமுக, அதிமுக, வேட்பாளர்களுக்கே கடும் டஃப் கொடுத்தனர். நடிகர் விஜய் பிரச்சாரத்துக்கு செல்லாமலேயே அவரது படத்தையும் கொடியையும் மட்டுமே பயன்படுத்தி இந்த வெற்றியை அவர்கள் சாத்தியப்படுத்தினர். இதனால் விஜய் மக்கள் இயக்கத்தின் நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் கவனிக்காமல் இல்லை.
நாடாளுமன்றத் தேர்தல்
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகள் ஒவ்வொன்றையும் அரசியல் கட்சியினர் கூர்ந்து கவனித்து வருகின்றனர். சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்திற்கு அந்த இயக்கத்தின் ஐடி விங் நிர்வாகிகள் இன்று பெருமளவில் திரண்டிருந்ததால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. தகவல் தொழில் நுட்ப அணியை வலிமைப்படுத்தும் விதமாகவே இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புஸ்ஸி ஆனந்த்
விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக உள்ள முன்னாள் எம்.எல்.ஏ. புஸ்ஸி ஆனந்த், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் களமிறங்கினால் அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை எனக் கூறப்படுகிறது. நடிகர் விஜயை அரசியலுக்கு வருமாறு அவரது ரசிகர்கள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருவது கவனிக்கத்தக்கது. ஆனால் அது தொடர்பாக நடிகர் விஜய் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நலத்திட்ட உதவிகள்
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்து வருவது கவனிக்கத்தக்கது. இதனிடையே விஜய் மக்கள் இயக்கத்திற்கு கடந்த ஜூலை மாதம் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம், கூகுள் ப்ளே ஸ்டோரில் தனி ஆப், என சமூகவலைதளப் பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.