90 சீட் பேரம்? ஆதவ் அர்ஜுனா அப்படி சொன்னாரே.. இல்லவே இல்லை என திட்டவட்டமாக மறுத்த விஜய்!
சென்னை: "90 சீட்டுகள், 50-50 என எவ்வளவோ டீல் பேசினார்கள்." என தவெக தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று பேசியிருந்த நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து பரவிய தகவல்கள் எல்லாம் வதந்தி என தவெக தலைவர் விஜய் இன்று பேசியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம் பகுதியில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் புனித ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தவெக தலைவர் விஜய், பொதுமக்களுடன் அமர்ந்து நோன்பு கஞ்சியினை அருந்தி நோன்பு திறந்ததோடு, அவர்களுடன் இணைந்து தொழுகையிலும் ஈடுபட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய விஜய், அண்மைக்காலமாகத் தன் மீதும் கட்சி மீதும் பரப்பப்படும் அரசியல் வதந்திகளுக்கு பதில் கொடுத்தார். அவர் பேசுகையில், "நாம் அரசியலுக்கு வந்த நாள் முதலே நம்மைப் பற்றித் தேவையற்ற வதந்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. நாம் இந்த டீம், அந்த டீம், அந்தப் பக்கம் சேரப் போகிறோம் என்றெல்லாம் பேசுகிறார்கள்.
நான் மீண்டும் ஒருமுறை தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.. நாம் மக்களின் டீம். என்னை என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்கள், கூட்டணி குறித்த பொய்யானப் பிரச்சாரத்தைச் செய்து உங்களைக் குழப்ப முயல்கிறார்கள்," என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மதச்சார்பற்ற கொள்கையில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என உறுதி செய்தார். "நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். கட்சியின் முதல் மாநாட்டிலேயே நான் குறிப்பிட்டது போல, யாருக்காகவும் எதற்காகவும் நமது கொள்கைகளை விட்டுக் கொடுக்கப் போவது கிடையாது. யார் என்ன அவதூறு பரப்பினாலும் அதை நம்ப வேண்டாம்" என்று தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், "எல்லாம் வல்ல இறைவனின் அருளால் நாம் நிர்ணயித்துள்ள அரசியல் இலக்கை நிச்சயமாக அடைவோம்" என்று நம்பிக்கையுடன் உரையை நிறைவு செய்தார் விஜய். இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் தவெகவின் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
கடந்த சில நாட்களாக பாஜக மேலிடம், குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டு வரத் தீவிர முயற்சி எடுத்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதற்காக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மூலமாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தவெக சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதியில் நேற்று கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா போன்ற கட்சியின் மூத்த நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் ஆதவ் அர்ஜூனா பேசும்போது, "இந்த நோன்பு மாதத்தில் சொல்கிறேன்.. 90 சீட்டுகள், 50-50 என எவ்வளவோ டீல் பேசினார்கள். ஆனால், தலைவர் மக்களுக்காக தனித்து நிற்க வருகிறார்." எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தவெகவுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவிய நிலையில். விஜய் இந்த நிகழ்ச்சியில் பேசியதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அப்படி எந்தப் பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை எனக் கூறி இருக்கிறார் விஜய்.












Click it and Unblock the Notifications