Horse Trading: எங்கள் அரசு குதிரை பேரம் அரசு இல்லை.. குதிரை வேக அரசு! உதயநிதி ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் பதிலடி
சென்னை: தவெக அரசு அமைய குதிரை பேரம் நடந்ததாக உறுப்பினர்கள் சொல்லியிருக்கிறார். இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே தவிர குதிரை பேரத்தை நடத்தவில்லை என்பதை தெரிவித்துக் கொள்வதாக விஜய் தெரிவித்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான தீர்மானம் முடிந்ததும் முதல்வர் விஜய் நன்றி கூறி விஜய் பேசுகையில், எங்கள் ஆட்சி அமைய குதிரை பேரம் நடந்ததாக சில உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான், எங்கள் அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரம் செய்யும் அரசு அல்ல.

அது போல் ராஜகுரு நியமனம் குறித்து சில எம்எல்ஏக்கள் கூறியதை மறுபரிசீலனை செய்கிறேன். இந்த அரசுக்கு ஆதரவளித்த தோழமை கட்சியினருக்கும், தோழமை கட்சி எம்எல்ஏக்களுக்கும் நன்றி. இந்த அரசு நீடிக்க வாக்களிக்காதவர்களுக்கும் நன்மை செய்யக் கூடிய அரசாக இது அமையும்.
முந்தைய அரசுகளால் கொண்டு வரப்பட்ட முக்கிய மக்கள் நலத்திட்டங்கள் தொடரும் என உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தனி அணியாக, மக்கள் அணியாக, மக்கள் விரும்பும் அணியாக களமிறங்கியது.
1967, 1977 தேர்தல்களை போலவே சாமானியர்களின் அரசையே அமைக்கும் என்று நாங்கள் தீர்மானமாக கூறினோம், அதன்படியே ஒரு விரல் புரட்சி விசில் புரட்சியானது. இந்த அரசு சாமானியர்களின் அரசாக அமையும். தனிபெரும் கட்சியாக எங்களை மக்கள் சட்டசபைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் அந்த தனிப்பெரும்பான்மை நூலிழையில் தவறிவிட்டது. பெரும்பான்மை இன்றி சிறுபான்மை என கூறினாலும் அதுவும் எங்களுக்கு மகிழிச்சிதான். எங்கள் அரசு சிறுபான்மை அரசுதான். சிறுபான்மை மக்களை பாதுகாக்கும் அரசு.
பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என அனைவருக்குமான அரசாக இருக்கும். கொள்கைத் தலைவர்கள் வழியில் மனசாட்சியுள்ள மக்களாட்சி அரசாக இருக்கும். சமூக நீதி, மதசார்ப்பற்ற , ஜாதி மதம் பாகுபாடு காட்டாத அரசாக இருக்கும். துணிச்சலுடன் செயல்படும் அரசாக இருக்கும். பதவிக்காக அதிகாரத்திற்காக அமைந்த அரசு அல்ல, இது மக்களுக்காக அமைக்கப்பட்ட அரசு என விஜய் பேசியிருந்தார்.
மேலும் விஜய் பேசுகையில் நம் தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்த தலைவர்கள் வழிகாட்டிய கொள்கைகளில் இருந்து இம்மியளவு விலகாமல் இந்த ஆட்சி நடைபெறும். டாஸ்மாக் கடைகள் குறித்து சவுமியா பேசியதை கருத்தில் கொள்வதாகவும் முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார்.
இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் கட்சிக்கு 144 பேர் ஆதரவு தெரிவித்ததால் இந்த ஆசிட் டெஸ்ட்டில் விஜய் தேர்ச்சியாகிவிட்டார். அடுத்த 6 மாதங்களுக்கு இந்த அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.












Click it and Unblock the Notifications