விஜய்க்கு தொடரும் சிக்கல்.. கூட்டணிக்கு தயங்கும் இடதுசாரிகள்! விஷயம் இதுதான்!
சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் பெரிய கட்சியாக உருவெடுத்திருக்கிறார். இருப்பினும் ஆட்சியமைக்க இன்னும் 11 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறார்கள். இடதுசாரிகள் விஜய்க்கு உதவுவார்கள் என்று பரவலாக பேசப்பட்டாலும், கட்சியின் தலைமை இப்போது வரை அப்படியான எந்த முடிவையும் எடுக்கவில்லை.
ஏன் விஜய் உடன் கூட்டணி வைப்பதில் கட்சி தலைமை தயங்குகிறது? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு பேச்சுகள் எழுந்திருக்கின்றன.

விஜய்யை பொறுத்தவரை, தவெகவுக்கு 108 தொகுதிகள் கைவசம் இருக்கிறது. விஜய் இரண்டு தொகுதிகளில் ஜெயித்திருக்கிறார். எனவே கணக்கு 107 தான். ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை. தமிழகத்தில் யாரும் சுயேட்சையாக வெற்றிப்பெறவில்லை. எனவே விஜய்யால் திமுக கூட்டணியிலிருந்து அல்லது, அதிமுக கூட்டணியிலிருந்துதான் ஆட்களை பிரித்து வந்து ஆட்சியமைக்க முடியும்.
இதிலும் பிரச்சனை இருக்கிறது. திமுக 59, அதிமுக 47 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே இந்த எம்எல்ஏக்களை அழைத்து வர முடியாது. ஆனால் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் (5), சிபிஎம் (2), சிபிஐ (2), விசிக (2) ஆகிய கட்சிகளை அழைத்து பேசி ஆட்சி அமைக்கலாம். அல்லது, காங்கிரஸ் மற்றும் என்டிஏ கூட்டணியில் உள்ள பாமகவை (4) அழைத்து, விசிக ஆதரவுடன் ஆட்சியமைக்கலாம்.
பெரும்பான்மையை நிரூபிக்க 118 போதுமானதுதான். ஆனால், அதை வைத்து ஆட்சியில் நிம்மதியாக இருக்க முடியாது. திடீரென ஒரு எம்எல்ஏ கட்சி மாறினால், அல்லது உயிரிழந்துவிட்டால் பெரும்பான்மை தவறிவிடும். எனவே கூடுதல் ஆதரவு முக்கியம். இங்குதான் கம்யூனிஸ்ட்களின் பங்கு அவசியம். இருப்பினும் கம்யூனிஸ்ட்கள் இது குறித்த எதுவும் அறிவிக்கவில்லை.
காரணம் ஏற்கனவே திமுக உடன் பயணித்ததால், அக்கட்சி செய்த தவறுகள் எல்லாவற்றையும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் சேர்ந்து சுமந்து வந்தன. உதாரணமாக சென்னை தூய்மை பணியாளர்கள் போராட்டம், சென்னையிலிருந்து பூர்வகுடி மக்களை வெளியேற்றியது போன்ற பிரச்சனைகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பெயர்கள் பயங்கரமாக அடிவாங்கின.
கொள்கை உள்ள கட்சியே இப்படி பல தவறுகளை செய்திருக்கிறது எனில், விஜய் போன்ற கொள்கை இல்லாத கட்சி எந்த தவறும் செய்யாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அப்போது கூட்டணியில் இருந்தால், அது கம்யூனிஸ்ட்களுக்கும் இழுக்கு. எனவே, விஜய்யின் செயல்பாடுகள் எந்த அளவுக்கு திருப்பதிகரமாக உள்ளது என்பதை பொறுத்திருந்து பார்த்து, 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications