விஜய் அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநில தலைவர் ராஜினாமா
நடிகர் விஜயின் அப்பா எஸ். ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் பத்மநாபன் என்கிற திருச்சி ஆர்.கே. ராஜா.
சென்னை: நடிகர் விஜய் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநிலத்தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக கூறி ராஜினாமா கடிதம் அளித்துள்ளார் திருச்சி ஆர்.கே. ராஜா. சந்திரசேகர் கட்சி தொடங்கி 15 நாட்களுக்குள் கலகலத்து போய் விட்டது.
இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ சந்திரசேகர் திமுகவின் அபிமானியாக இருந்தார். மகன் விஜய் நடிக்க வந்த பிறகு 1993 முதல் விஜய் ரசிகர் மன்றம் தொடங்கி ரசிகர்களையும், விஜய்யையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். விஜய் ரசிகர் மன்றம் விரைவில் அரசியல் கட்சியாக மாறும் என்றும் கூறியிருந்தார் சந்திரசேகர்.
கடந்த 5ஆம் தேதியன்று எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நவம்பர் 5ஆம் தேதியன்று புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். இந்தப் புதிய கட்சிக்கு பொதுச்செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், தலைவராக பத்மநாபன் என்கிற ஆர்.கே ராஜா, பொருளாளராக ஷோபா சந்திரசேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
போலீஸ் தேடுகிறது.. புஸ்சி ஆனந்த்தான் காரணம்.. 'தளபதி விஜய் மக்கள் இயக்க' தலைவர் ராஜா பரபர வீடியோ
விஜய் மறுப்பு
கட்சியின் பெயரைத் தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்திருக்கிறார் எஸ்.ஏ சந்திரசேகர். விஜய் அரசியலுக்கு வந்து விட்டார் என்ற தகவல் பரவிய நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கிய இயக்கத்துக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென அதிர்ச்சியைக் கிளப்பினார் நடிகர் விஜய்.
விஜய் கோபம்
எனக்கும், என் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொடர்பும் இல்லை. எனது பெயரையோ, புகைப்படத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்றும் எஸ்.ஏ சந்திரசேகருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் விஜய்.
விஜய் ரசிகர்களுக்கு அங்கீகாரம்
கட்சி தொடங்கியது பற்றி விளக்கம் அளித்த எஸ்.ஏ சந்திரசேகர், 25 வருடங்களாக நான் இந்த அமைப்பை நடத்திவருகிறேன். என்னுடன் விஜய் ரசிகர்கள் பலர் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு ஓர் அங்கீகாரம் வேண்டும் என்பதுதான் என் நோக்கம். இது முழுவதும் நான் எடுத்த முடிவு மட்டுமே. விஜய்க்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறினார் சந்திரசேகர்.
ஷோபாவும் விலகல்
கணவரின் கட்சி பற்றி பேசிய விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், அசோஸியேஷன் தொடங்குகிறேன் என்று கூறி எனது கணவர் எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் முதலில் ஒரு கையெழுத்து பெற்றார். பின்னர் ஒரு வாரத்துக்கு முன்பு இன்னொரு விண்ணப்பத்தை கொடுத்து கையெழுத்து கேட்டபோது, அது கட்சி தொடங்குவதற்கானது என்று அறிந்து கொண்டேன். விஜய்க்கு தெரியாமல் நீங்கள் இதனை செய்வதால் நான் கையெழுத்து போட மாட்டேன் என்று அவரிடம் தெரிவித்து விட்டேன் என்று கூறினார்.
15 நாட்களில் கலகலத்தது
கட்சி தொடங்கி 15 நாட்கள் கூட நிறைவடையவில்லை விஜய் ரசிகர்கள் மத்தியில் மாறி மாறி குழப்பம் உருவானது. தனது ரசிகர்களை ரகசியமாக சந்தித்து பேசினார் விஜய். இந்த நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியின் மாநில தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார் பத்மநாபன் என்கிற திருச்சி ராஜா. இன்னும் என்னென்ன நடக்கப் போகுதோ.