இனி சிங்கப் பாதை தான்.. விஜய் அதிரடி முடிவு.. தடதடக்கும் தவெக மாநாடு
சென்னை: முழுநேர சினிமாவில் இருந்து ஜம்ப் அடித்து, விஜய் முழுநேர அரசியலில் பயணிக்க உள்ளார். விஜய் தொடங்கியுள்ள தவெகவின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்க உள்ளது. விஜய் நடிக்கும் படங்களுக்கே ஏராளமான தடைகள் வரும் நிலையில், அவரின் முதல் மாநாட்டுக்கும் தடைகள் வரும் என்பதை முன்கூட்டியே கணித்து, அதற்கு சிறப்பு வியூகங்களையும் வகுத்துள்ளனர்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். தற்போது அ.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்துடன் சினிமாவுக்கு முழுக்கு போட்டு, முழுநேர அரசியலுக்குள் நுழையவுள்ளார். 2026 சட்டசபை தேர்தலை குறிவைத்து விஜய் கட்சி பணியாற்ற உள்ளது. இந்நிலையில், அந்தக் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளில் தவெக கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். மாநாடு தொடர்பாக 25க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டை வெற்றிகரமாக நடத்த விஜய் பல்வேறு உத்தரவுகளை வழங்கி வருகிறார். இதுகுறித்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட ரீதியாக பயணித்து அந்தக் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த வாரத்தில் விக்கிரவாண்டியில் பூமி பூஜையுடன் பணிகளை தொடங்க உள்ளனர். ஏற்கனவே மாநாட்டுக்கு காவல்துறை 33 நிபந்தனைகளை வைத்துள்ளது. விஜய் அரசியல் என்ட்ரி காரணமாக தான், உதயநிதியை துணை முதல்வராக நியமனம் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 2026 அரசியல் களம் விஜய் VS உதய் என்று தான் இருக்கும் எனவும் கூறுகின்றனர்.
பொதுவாக எதிர்க்கட்சிகள் நடத்தும் மாநாடுகளுக்கு, ஆளுங்கட்சி தடங்கல் ஏற்படுத்தும். விஜய் கட்சியின் முதல் மாநாடு என்பதால், இதை பலரும் உற்று நோக்கி வருகின்றனர். அந்த வகையில் முதல் மாநாட்டில் இருந்தே திமுக விஜய்க்கு நெருக்கடி கொடுக்கும் என விஜய்யின் நெருங்கிய வட்டாரம் அவரை அலர்ட் செய்துள்ளது.
இதற்காக விஜய் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தவெக நிர்வாகிகள் கூறுகையில், எங்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்த, தளபதி சில வியூகங்களை வகுத்துள்ளார். பொதுவாக மாநாட்டுக்கு வரும்போது, பல வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கி மாநாட்டு திடலுக்கு வரமுடியாமல் போகும். இதனால் தொண்டர்கள் வீட்டில் இருந்து மாநாட்டில் கலந்து கொண்டு, பத்திரமாக வீடு திரும்ப ஒரு வியூகம் வகுத்துள்ளார்.
மாநாட்டுக்கு வரும் அனைத்து வாகனங்களின் பதிவு எண், ஆர்.சி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட ஆவண நகல்களை கட்சி தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லியுள்ளனர். போக்குவரத்து சிக்கல்களில் உள்ள தடைகளை நீக்க, வழக்கறிஞர் அணிக்கு சிறப்புப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஏதாவது தடையில் சிக்கினால், வழக்கறிஞர் அணிக்கு அந்தப் பிரச்னையை சரி செய்ய உத்தரவிட்டுள்ளது. மாவட்டம் வாரியாக வழக்கறிஞர் அணியின் தொடர்பு எண்களை, தொண்டர்களுக்கு வழங்கியுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 6,000 - 10,000 தொண்டர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று டார்கெட் வைத்துள்ளனர். அதன்படி 38 மாவட்டங்களில் சுமார் 4 லட்சம் தொண்டர்கள் மாநாட்டில பங்கேற்க திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையிடம் ஆலோசனை செய்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கவும் முடிவு செய்துள்ளனர். மாநாட்டுக்கு எந்த தடை வந்தாலும், அதை தகர்த்தெறிந்து வெற்றி பாதையில் பயணிக்க வேண்டும் என்பதில் விஜய் உறுதியாக உள்ளார் என்றனர்.












Click it and Unblock the Notifications