WFH டூ வீக் என்ட் பாலிடிக்ஸ்! தவெக விஜய்யின் சூறாவளி சுற்றுப்பயண விவரம் வெளியானது!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப்பயண விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதே வேளையில் விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார்.
விஜய் வரும் 13 ஆம் தேதி முதல் கட்ட அரசியல் சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் ஆணையரிடம் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இந்த சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது.
இவருடைய சுற்றுப்பயணம் வரும் 13 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்த சுற்றுப்பயணமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
வரும் 13 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
அதன் பிறகு வரும் 20ஆம் தேதி நாகை, திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 4ஆம் தேதி, அக்டோபர் 5ஆம் தேதியும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அது போல் அக்டோபர் 11 ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், அக்.25 ஆம் தேதி தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் விஜய் பரப்புரை நடத்துகிறார்.
அது போல் நவம்பர் 1 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் நவம்பர் 8 ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நவம்பர் 15 ஆம் தேதி தென்காசி, விருதுநகர், நவம்பர் 22 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது.
நவம்பர் 29ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் டிசம்பர் 6ஆம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் டிசம்பர் 13 ஆம் தேதி சேலம், நாமக்கல் , கரூர் மாவட்டங்களிலும் டிசம்பர் 20ஆம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரையிலும் சுற்றுப்பயணத்தை முடிக்கிறார் விஜய்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததும் அவர் பொதுமக்களை சந்திக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார். இதனால் அவரை எதிர்க்கட்சிகள் வொர்க் பிரம் ஹோம் பாலிடிக்ஸை விட்டு வெளியே வர வேண்டும். பொதுமக்களை சந்திக்க வேண்டும் என்றனர்.
வெள்ளத்தால் பாதித்த மக்களையும், தூய்மை பணியாளர்கள் போராட்டக் குழுவினரையும் தன் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்தார் விஜய். இதுவும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில் விஜய்யின் சுற்றுப்பயண அட்டவணையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அவர் பிரச்சாரம் செய்வது போன்ற அமைக்கப்பட்டுள்ளது. இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் வீக் என்ட் பாலிடிக்ஸ் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications