“பாஜக உள்ள வரக்கூடாது..” என சொல்லி விஜய் பக்கம் போன காங்கிரஸ்! திருமாவளவன் எழுப்பிய முக்கிய கேள்வி!
சென்னை: விஜய் ஆட்சி அமைக்க போராடிக்கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. பாஜகவின் நுழைவை தடுக்கவே இந்த கூட்டணி என கதர் தலைவர்கள் கூறி வருகின்றனர். இப்படி இருக்கையில், திருமாவளவன் எழுப்பியிருக்கும் கேள்வி முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், "விஜய் ஆதரவு கேட்டு கடிதம் எழுதி இருக்கிறார். இடதுசாரி கட்சிகளுக்கும் அவர் கடிதம் எழுதி இருக்கிறார். இது தொடர்பாக கட்சியின் முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்தாய்வு செய்த பின்னர் தான் முடிவெடுக்க முடியும். நாளை முன்னணி பொறுப்பாளர்களோடு கலந்து பேச இருக்கிறோம்.

விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்து வாக்களித்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர் நல்லாட்சியை தருவார் என்று நம்புகிறேன். திமுக உடனான கூட்டணியை பொறுத்தவரை, நாங்கள் கூட்டணியுடன் நீண்ட காலமாக பயணித்து வந்திருக்கிறோம். இப்போதும் அந்த நட்பு நீடிக்கிறது.
விஜய் கடிதம் எழுதி இருக்கிற நிலையில், கட்சியினுடைய முன்னணி பொறுப்பாளர்களின் கருத்தை அறிந்து ஒரு முடிவை எடுப்போம். ஆகவே காங்கிரஸ் என்ன நிலைப்பாடு எடுத்திருக்கிறது, அல்லது மற்ற கட்சியில் இருந்து நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள் என்பதெல்லாம் தாண்டி எங்கள் கட்சியின் முன்னணி தோழர்களுடைய கருத்தை அறிந்த பிறகு தான் நாங்கள் முடிவு அறிவிப்போம்" என்று கூறியிருந்தார்.
பாஜகவின் நுழைவை தடுக்கவே தவெக உடன் கூட்டணி என்று காங்கிரஸ் சொல்கிறதே! அது குறித்து உங்கள் கருத்து என்ன செய்தைியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த திருமாவளவன், "பாஜக ஒரே ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்று இருக்கிறது. இப்படி இருக்கையில் விஜய் ஆட்சியமைப்பதில் எப்படி தலையீடு செய்ய முடியும்? என்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.
விஜய்யை பொறுத்தவரை ஆட்சி அமைக்க மேலும் 12 எம்எல்ஏக்களின் ஆதரவு அவசியம். காங்கிரஸ் 5 எம்எல்ஏக்களை வைத்திருக்கிறது. அதேபோல விசிக, சிபிஎம், சிபிஐ ஆகியவை தலா 2 தொகுதிகளை வைத்திருக்கின்றன. மொத்தமாக சேர்தால் 11 தொகுதிகள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications