இடதுசாரிகளை கூப்பிடாத விஜய்.. “கடிதம் எதுவும் வரவில்லையே!” ஓபனாக பேசிய சிபிஎம்!
சென்னை: விஜய்யிடமிருந்து ஆதரவு கேட்டு கடிதம் வந்திருப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார். இடதுசாரி கட்சிகளுக்கும் கடிதம் சென்றிருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் வரவில்லை என தற்போது சிபிஎம் கூறியிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தார். அவரது கட்சி 108 தொகுதிகளில் ஜெயித்திருந்தது. ஆனால், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை.

இந்நிலையில், கூட்டணியில் சேர காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்திருந்தார். காங்கிரஸ் இந்த அழைப்பை ஏற்று நேற்று பரிசீலனை செய்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, இந்த விவகாரம் குறித்து நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்படைத்துவிட்டது.
இன்று காலை விஜய்யின் பனையூர் அலுவலகத்திற்கு சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களை சேர்த்தால், தவெகவின் பலம் 113 என உயர்ந்திருக்கிறது. இருப்பினும் விஜய் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒன்று ராஜினாமா செய்ய வேண்டும். எனவே 112 என பலம் இருக்கிறது.
இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா 2 எம்எல்ஏக்களை வைத்திருக்கின்றனர். இதை சேர்த்தால் தவெகவுக்கு தேவையான பலம் கிடைத்துவிடும். எனவே இந்த கட்சிகளை தவெக விரைவில் நாடும் என்று சொல்லப்பட்டது.
அதன்படி விசிகவுக்கு தவெக ஆதரவு கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது. அதை திருமாவளவன் உறுதி செய்திருக்கிறார். இடதுசாரி கட்சிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிபிஎம் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், ஆதரவு கேட்டு விஜய் தரப்பிலிருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று கூறிவிட்டார்.
இது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸை அழைத்த விஜய், பாமகவை கூப்பிட்டு ஆட்சி அமைக்கலாம் என்று கனவு காண்கிறாரோ? என்கிற கேள்வியையும் எழுப்பியிருந்தது. இது தவிர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தவெக தரப்பு சந்தித்திருந்தது. அப்படியெனில் அதிமுக தவெக உடன் கூட்டணிக்கு போகிறதா? என்றும் கேள்வி எழுந்தது.
இடதுசாரிகளை சேர்த்துக்கொண்டால், அவர்கள் சொல்லும்படி ஆட்சி நடத்த வேண்டி இருக்கும். மக்கள் நலத்திட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டி இருக்கும். இல்லையெனில் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவார்கள். அவ்வளவு ரிஸ்க் எடுத்து இடதுசாரிகளை சேர்த்துக்கொள்ள வேண்டுமா? என்று தவெக யோசித்துதான், கடிதம் அனுப்பாமல் இருந்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications