உதயநிதிக்கு போன் போட்ட எடப்பாடி பழனிச்சாமி.. விஜய்யின் முதல்வர் கனவு காலியாகிறது? திரைமறைவில் வேலை
சென்னை: தமிழ்நாடு அரசியலில் யாரும் எதிர்பார்க்காத பெரிய விஷயத்தை அரங்கேற்ற திமுகவும், அதிமுகவும் காய் நகர்த்தி வருகிறது. தவெக விஜய்க்கு முதல்வர் கனவை கனவாகவே செய்ய அதிமுக தீவிர முயற்சியில் இறங்கி உள்ளது. அதன்படி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டு கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு கோரியுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வென்றாலும் மெஜாரிட்டி இல்லாமல் தவித்து வருகிறது. தற்போது தவெகவிற்கு 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சேர்ந்துள்ளனர். இருப்பினும் இன்னும் மெஜாரிட்டிக்கு இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவையானதாக உள்ளது. இதனால் தான் விஜய் முதல்வராக பதவியேற்பது தள்ளிப்போகிறது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மெஜாரிட்டி காட்டினால் தான் பதவியேற்க அழைககப்படும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

இதற்கிடையே தான் விஜய் மெஜாரிட்டி நிரூபிக்க தவறினால் அதிமுகவும், திமுகவும் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க ரெடியாகி வருகிறது. இதற்காக திரைமறைவில் அதிமுக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே தான் திமுக - அதிமுக இடையே நடக்கும் பேச்சுவார்த்தை தொடர்பான பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடி - உதயநிதி பேச்சு
அதாவது கடந்த 4ம் தேதி சட்டசபை தேர்தல் முடிவு வெளியானது. அன்றைய தினமே தமிழகத்தில் தொங்கு சட்டசபை தான் உருவாகும் என்பதை இருகட்சிகளும் உணர்ந்து கொண்டன. இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, உதயநிதி ஸ்டாலினை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு பேசி உள்ளதாக கூறப்படுகிறது. தவெக மெஜாரிட்டி இல்லாததால் அவர்களால் ஆட்சி அமைக்க முடியாது. இதனால் அதிமுகவிற்கு, திமுக ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டாலின் முடிவெடுக்க அதிகாரம்
இதில் முதலில் திமுக தயக்கம் காட்டி உள்ளது. ஆனால் திமுக கூட்டணியில் 5 எம்எல்ஏக்களுடன் இருந்த காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் சாய்ந்தது. இது திமுகவிற்கு பிடிக்கவில்லை. இதையடுத்து அதிமுகவிற்கு ஆதரவளிப்பது பற்றி திமுகவும் தீவிர பரிசீலனை செய்ய தொடங்கி உள்ளது. அந்த வகையில் தான், திமுகவிடம், எடப்பாடி பழனிச்சாமி ஆதரவு கோரியிருப்பது பற்றி நேற்று திமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசியுள்ளார். அப்போது திமுகவின் ஆதரவை அதிமுக கோரியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை திமுக எம்எல்ஏக்கள் முக ஸ்டாலின் வசம் எம்எல்ஏக்கள் ஒப்படைத்துள்ளனர். அப்போது ஸ்டாலின், நான் கட்சியின் நலனுக்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பேன். அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று கூறியுள்ளதோடு, வரும் 10ம் தேதி வரை சென்னையிலேய தங்கியிருக்க வேண்டும் என்று எம்எல்ஏக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தீர்மானத்தை கவனிச்சீங்களா
மேலும், இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மொத்தம் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதில் 3வது தீர்மானம் மிகவும் முக்கியமானது. அந்த தீர்மானத்தில் ''நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத வகையில் முடிவுகள் வந்துள்ளது. இது நெருக்கடியான, சிக்கலான காலகட்டம் ஆகும். இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம். அதேவேளையில், திராவிட இயக்கத்தின் கொள்கைகளுக்கு உறுவிளைவிக்கும் மதவாத சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது என்பது உள்ளிட்டவற்றையும் பரிசீலித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் அப்படியே தொய்வின்றி தொடர்ந்தால் தான் தமிழ்நாடு அதே வேகத்தில் வளர்ச்சியைத் தக்க வைக்க முடியும் என்பதும் நமது விருப்பம் ஆகும். இத்தகைய சூழலில் உருவாகும் அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்குவது என இக்கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது என அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் தந்த சிக்னல்
பொதுவாக யாருக்கும் ஆட்சியமைக்க வேண்டிய மெஜாரிட்டி கிடைக்காவிட்டால் கூட்டணி ஆட்சிக்கு அழைப்பு விடுக்கப்படும். யாரும் ஆட்சியமைக்க விரும்பாவிட்டால் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டு மறுதேர்தல் நடத்தப்படும். ஆனால் தற்போதைய சூழலில் விஜய் பெரும்பான்மையின்றி தவிக்கும் நிலையில் 2வது பெரிய கட்சியான திமுக, 3வது பெரிய கட்சியான அதிமுக ஆகியவை கூட்டணி ஆட்சிக்கு உரிமை கோரலாம். இந்த கூட்டணிக்கு மொத்தம் 121 எம்எல்ஏக்கள் உள்ளன.
இதன்மூலம் ஆட்சியை பிடிக்க முடியும். இதனால் மறுதேர்தல் வராது. இந்நிலையில் தான் திமுகவின் தீர்மானத்தில் ''இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லாத நிலையில், தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதே நமது முதன்மை நோக்கம்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அதிமுகவை ஆதரிக்க திமுக தயாராகிவிட்டதா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
அதிமுக டிமாண்ட்டை பரிசீலிக்கும் திமுக
மேலும் இந்த விஷயத்தில் தொடக்கத்தில் திமுக எதிர்க்கட்சியாக செயல்பட விரும்பிய நிலையில் அதிமுக ஆதரவு கேட்டுள்ளதால் நிலைப்பாட்டை மாற்ற பரிசீலனை செய்து வருகிறது. தவெக தலைவர் விஜய் முதல்வராவதையே தடுப்பதே நோக்கம் என்று அதிமுக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல் விஜய்யின் தவெக ஆட்சி கட்டிலில் அமர்ந்தால் எங்கே எம்ஜிஆர் போல் நீண்டகாலம் மீண்டும் மீண்டும் ஆட்சியை பிடித்து விடுவாரோ? என்ற அச்சம் திமுகவிடம் உள்ளது. இது திமுக கட்சியின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் திமுகவும், அதிமுகவின் கோரிக்கையை பரிசீலனையில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இருப்பினும் விஜய்யால் மெஜாரிட்டி நிரூபிக்க முடியாவிட்டால் தான் இந்த முயற்சியை எடுக்க இருகட்சிகளும் நினைத்துள்ளன. குறிப்பாக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளை எப்படியாவது தங்களுடனே தக்கவைத்து கொள்ள வேண்டும் என்று திமுக நினைக்கிறது. இதனால் தான் தவெக ஆதரவு கோரியுள்ள திமுக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் விசிக தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளதோடு கூட்டணியை விட்டு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தி உள்ளதோடு திமுக - அதிமுக கூட்டணி அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் தமிழக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications