நம்முடைய ஒரே குறிக்கோள் அதுதான்! வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி விஜய் சொன்ன மெசேஜ்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியிருந்தார். தற்போது விஜய் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு, "மக்களின் நலனே நமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில வளர்ச்சியின் முன்னேற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இமாலய வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது.

விஜய்க்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய், விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 10 எம்எல்ஏக்கள் தேவை. அந்த ஆதரவை யார்-யார் அளிக்கப்போகிறார்கள் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தயவை விஜய் நாடியிருப்பதாகவும் வேறு சில கட்சிகளுடன் தவெக தரப்பில் பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "சிறப்பான வெற்றியை பெற்றுள்ள தவெகவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
மத்திய அரசு உதவி செய்யனும்
தமிழக வளர்ச்சிக்காகவும் நலனுக்காகவும் மத்திய அரசு எல்லா வகையிலும் ஆதரவு அளிக்கும் என்று பதிவிட்டு இருந்தார்." பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள விஜய், பதிவிட்டு இருப்பதாவது:- பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களின் நலனே நமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில வளர்ச்சியின் முன்னேற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த முயற்சிக்கு மத்திய அரசின் உதவியை நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications