கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் கலைஞர் கருணாநிதி ரெண்டு தொகுதில போட்டி போட்டு இருக்கார் என்று யூடியூபர் பிரசாந்த் என்கிற பாண்டா போட்டுள்ள கருத்து விவாதமாகி இருக்கிறது. யூடியூபர் பிரசாந்த் சொன்னதை போல் உண்மையாகவே கருணாநிதி 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளாரா என்பதன் உண்மைத்தன்மை தொடர்பாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தலில் தவெக தலைவர் விஜய் ஒரே நேரத்தில் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் விஜய் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் சிறுபான்மை சமூக வாக்குகள் அதிகமாக உள்ளனர். அதேபோல் இளம் வாக்காளர்களும் அதிகம் இருக்கின்றனர். இதனால் விஜய் இரு தொகுதிகளிலும் போட்டியிடுவதாக பார்க்கப்படுகிறது.

இந்த சட்டசபைத் தேர்தலில் எந்த தலைவர்களும் இரு தொகுதிகளில் போட்டியிடவில்லை. இதனால் இரு தொகுதிகளில் விஜய் போட்டியிடுவது அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. எதிர்க்கட்சிகளில் உள்ள பலரும் விஜய் தோல்விக்கு பயந்தே இரு தொகுதிகளில் போட்டியிடுவதாக விமர்சித்து வருகின்றனர். அதேபோல் விஜய்யும் இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்கான காரணத்தை கூட சொல்லவில்லை.
இதற்கு முன்பாக 1991 சட்டசபைத் தேர்தலில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பர்கூர் மற்றும் காங்கேயம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டிருந்தார். அதன்பின் தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்களில் கிருஷ்ணசாமியை தவிர்த்து வேறு யாரும் இரு தொகுதிகளில் ஒரே நேரத்தில் போட்டியிடவில்லை.
இப்படியான சூழலில் யூடியூபர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில், கலைஞரே ரெண்டு தொகுதில போட்டி போட்டு இருக்கார் என்று பதிவிட்டிருக்கிறார். ஆனால் திமுக வரலாற்றிலேயே இதுவரை எந்த நிர்வாகியும் இரு தொகுதிகளில் போட்டியிட்டதே கிடையாது. அதேபோல் முன்னாள் முதல்வர் கருணாநிதி இதுவரை 14 தேர்தல்களில் 13 முறை போட்டியிட்டுள்ளார்.

அதன்படி 1957ல் குளித்தலை தொகுதியிலும், 1962ல் தஞ்சாவூர் தொகுதியிலும், 1967 மற்றும் 1971 ஆகிய தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியிலும், 1977 மற்றும் 1980 ஆகிய தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலும், 1989 மற்றும் 1991 ஆகிய தேர்தலில் துறைமுகம் தொகுதியிலும், 1996, 2001 மற்றும் 2006 ஆகிய தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியிலும், 2011 மற்றும் 2016 ஆகிய தேர்தல்களில் திருவாரூர் தொகுதியிலும் போட்டியிட்டிருக்கிறார்.
இதனால் யூடியூபர் பிரசாந்த் என்கிற பாண்டாவுக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். விஜய்க்கு ஆதரவாக பேசுகிறேன் என்ற பெயரில் பொய்யான செய்திகளை பொதுவெளியில் எழுத வேண்டும் என்றும் பதில் கொடுத்து வருகின்றனர். ஏற்கனவே கடந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக பல்வேறு பதிவுகளையும் பிரசாந்த் எழுதி வந்தார் என்றும் திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications