விஜய பிரபாகரன் ப்ரோ.. அதுக்குள்ள வாக்கு வங்கியை கேட்டா எப்படி.. புரியலையே!
விஜயகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: ரஜினி, கமலின் வாக்கு வங்கி என்ன என்பதை யாராவது கூற முடியுமா? என்று இதுவரை யாருமே கேட்காத ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்!!
இன்று விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனின் பிறந்தநாள். அதனால் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
அதற்காக நிறைய தேமுதிக நிர்வாகிகள் விஜயகாந்த் வீட்டில் குவிந்திருந்தார்கள். பிறந்த நாள் கேக்கினை வெட்டி அனைவருக்கும் விஜய பிரபாகரன் வழங்கினார். அத்துடன் பல பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் தந்தார்.

விஜய பிரபாகரன்
இதன்பிறகு செய்தியாளர்களிடம் விஜய பிரபாகரன் பேசினார். கட்சியில் முக்கிய பணி, கமல்-ரஜினியுடன் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு விஜயபிரபாகரன் அளித்த பதில்கள்தான் இவை:

சமூக வலைதளங்கள்
"நான் கட்சியில் பொறுப்பு தேடி வரவில்லை. என் அப்பா முதல்வர் ஆக வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஒரே குறிக்கோள். அதில் என்னுடைய பங்கை செய்கிறேன் அவ்வளவுதான். வரும் தேர்தலில் நான் போட்டியிடுவேனா இல்லையா என்பதை தலைமைதான் முடிவு செய்து அறிவிக்கும். நான் கட்சி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறேன். சமூக வலைதளங்கள் மூலமாக தொண்டர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.

எங்ககிட்ட கேட்காதீங்க
ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் தேமுதிக கூட்டணி வைக்குமா? என்ற கேள்வியை ஏன் எங்க கிட்ட கேட்கறீங்க? இதை அவர்களிடம்தான் கேட்கணும். ஏனென்றால் முதலில் அரசியலுக்கு வந்து கட்சி ஆரம்பித்தது எங்க அப்பாதான். எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். அதனால் தேமுதிகவை லேசில் எடை போடாமல், இந்த கேள்வியை அவர்களிடமே கேளுங்கள்.

ஜூனியர்கள்
அவர்கள் இருவருமே அப்பாவுக்கு ஜூனியர்கள் தான். அவர்களுடன் எங்களை ஒப்பிட வேண்டாம். கமலாவது கட்சி தொடங்கி இருக்கிறார். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அவர்களின் வாக்கு வங்கி என்ன என்பதை யாராவது சொல்ல முடியுமா? அதனால் அவர்கள் ரெண்டு பேரும் களத்திற்கு முதலில் வரட்டும், நாங்கள் தேர்தல் களத்தில் நின்று எங்களை நிரூபித்தோம். அதேபோல அவர்களும் நிரூபிக்கட்டும்.

வெற்றி பெறுவோம்
இப்போதே தேர்தல் வந்தாலும் தேமுதிக முழு மூச்சுடன் இறங்கி போராடி வெற்றி பெறும். ஆனால், தேர்தலை நடத்துவதில் ஆளும் கட்சி தயக்கத்தையே காட்டி வருகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானால் எங்களுடைய அடுத்தடுத்த நடவடிக்கைகளை தொடங்குவோம்" என்றார்.












Click it and Unblock the Notifications