ராமநாதபுரம் குழந்தை கை துண்டிப்பு! ஓ அதான் செந்தில் பாலாஜி காவேரிக்கு போய்ட்டாரா? விஜயகாந்த் கேள்வி
சென்னை: அரசு மருத்துவமனைகளில் அலட்சியப்போக்கு இருக்கிறது என்பது ராமநாதபுரம் குழந்தையின் கை துண்டிப்பு விவகாரத்தில் தெரிகிறது என்றும் இதனால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனையிலிருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தஸ்தகீர் (32). இவருக்கு 1.5 கிலோ எடையில் பிறந்த குறைமாத ஆண் குழந்தை முகமது மகிரினுக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது. குழந்தைக்கு மூளையில் செரிப்ரோஸ்பைனல் திரவம், நரம்பியல் கோளாறு உள்ளிட்ட பல உடல்நல பிரச்சினைகள் இருந்துள்ளது.

இந்த குழந்தைக்கு கடந்த மாதம் தலையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி குழந்தையின் தலையில் பொருத்தப்பட்டிருந்த டியூப் இயற்கை உபாதை கழிக்கும் போது வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மீண்டும் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார்.
அப்போது குழந்தையின் உடல்நிலையை கண்காணித்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்தனர். குழந்தைக்கு இரு கைகளிலும் டிரிப்ஸ் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி வலது கையில் டிரிப்ஸ் மூலம் மருந்து செலுத்தியுள்ளனர்.
அப்போது குழந்தையின் கை திடீரென நிறம் மாறத் தொடங்கியது. இதையடுத்து கை முழுவதும் நிறம் மாறிய நிலையில் குழந்தையை உறவினர்கள் நரம்பியல் மருத்துவரிடம் கொண்டு சென்றனர். அப்போது கை அழுகிவிட்டதால் அதை முற்றிலும் அகற்ற வேண்டும் என்றும் இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இதையடுத்து அந்த குழந்தைக்கு நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தோள் பட்டை முதல் வலது கை அகற்றப்பட்டது. அரசு மருத்துவமனையின் அலட்சிய போக்கால்தான் குழந்தையின் கை அழுகியதாக பலர் குற்றம்சாட்டி வருகிறார்கள். சில அரசியல் கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது ஆண் குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூலம் முழுவதுமாக அகற்றப்பட்டது. குழந்தையின் கையில் ட்ரிப்ஸ் போட்டதில் ஏற்பட்ட குறைபாட்டால் கை அழுகியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொடுத்த தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கால்பந்து வீராங்கனை பிரியா அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட தவறான சிகிச்சையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அண்மையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சளிக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவமும் அரங்கேறியது.
தனியார் மருத்துவமனைக்கு செல்ல போதிய பணம் வசதி இல்லாததால் ஏழை, எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து இதுபோன்ற தவறான சிகிச்சை அளிப்பது கடும் கண்டனத்துக்குரியது. உயிரைக் காப்பாற்ற வேண்டிய அரசு மருத்துவர்களே அலட்சியமாக செயல்படுவது எந்த வகையில் நியாயம். இது போன்ற சம்பவங்களால் அரசு மருத்துவமனைகளின் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாரா? என்ற கேள்வியும் அனைவர் மத்தியிலும் எழுகிறது.
இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறதா? போதிய அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். மேலும் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த மருத்துவர்கள் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதி உதவி வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications