விஜயகாந்த் சிங்கம் மாதிரி.. ரஜினி, கமல் எல்லாம்.. ஒரே அடியாக கலாய்த்த விஜயபிரபாகரன்.. பரபரப்பு!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போதும் சிங்கம்தான் என்று சென்னையில் நடந்த விழாவில் விஜயபிரபாகரன் பேசியுள்ளார்.
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போதும் சிங்கம்தான் என்று சென்னையில் நடந்த விழாவில் விஜயபிரபாகரன் பேசியுள்ளார். அதோடு இவர் தனது பேச்சில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தை கலாய்த்துள்ளார்.
சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் தேமுதிக சார்பில் தேமுதிக கொடி நாள் விழா நடைபெற்றது. இதில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பேசினார். அவர் இதில் ரஜினி, கமல், 2021 சட்டசபை தேர்தல் எல்லாம் குறித்து பேசினார்.
இந்த விழாவில் தேமுதிக தொண்டர்களுக்கு நிறைய பரிசு பொருட்கள் அளிக்கப்பட்டது. அதேபோல் விழாவிற்கு வந்திருந்த மாற்றுதிறனாளிகளுக்கு இலவச சைக்கிள், இஸ்திரி பெட்டிகள், அரிசி, உடைகள், ஹெல்மட், பெண்களுக்கு தையல் மிஷன், புடவைகள் வழங்கப்பட்டது.
என்ன பேச்சு
இந்த நிலையில் விஜயபிரபாகரன் தனது பேச்சில், நடிகர் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் முன்பு ஒன்றாக நடித்தார்கள். அதன்பின் அவர்கள் ஒன்றாக நடிக்கவில்லை. அவர்களுக்குள் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு விட்டது. அவர்கள் தமிழக அரசியலில் ஒன்று சேர வாய்ப்பு மிக மிக குறைவு. முக்கியமாக அவர்கள் சேர்ந்து ஒன்றாக நடிகர் சங்க தேர்தலை கூட சந்தித்தது இல்லை.
ரஜினி அரசியல்
அதேபோல் இன்னொரு பக்கம் ரஜினி இன்னும் முழுதாக அரசியல் கட்சியை தொடங்கவில்லை. ரஜினியும், கமலும் ஜாம்பவான்களாக இருக்கலாம். ஆனால் மக்கள் மன்றத்தில் நிற்க ஒரு தைரியம் தேவை. மக்களுக்கு இவர்கள் ஏதாவது செய்திருக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் வாக்களிப்பார்கள். அவர்கள் எல்லாம் மக்கள் மனதில் நிற்கவில்லை. அந்த வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இப்போதும் சிங்கம்தான்.
சிங்கம் எப்படி
சிங்கம் வெளியே இருந்தாலும் சிங்கம்தான். விஜயாகாந்த் வெளியே வரும் போது சிங்கம் வருவது போல இருக்கும். தமிழக அரசியலில் அவர் மீண்டும் வரும் போது ஒரு பிரளயமே இருக்கும். தேமுதிக இனி வேகமாக வளர போகிறது. மக்களை வேகமாக தேமுதிக கவர போகிறது. இனி நமக்கு ஏறுமுகம்தான் என்பதை மறக்க வேண்டாம். 2021 தேர்தலில் தேமுதிக தனது பலத்தை நிரூபிக்கும்.
கெத்து
விஜயகாந்த் சூப்பரா, கெத்தா, ஸ்டைலாக இருக்கிறார். அவர் இப்போது மிகவும் துடிப்புடன் இருக்கிறார். விஜயகாந்த் அரசியலுக்கு மீண்டும் வரும் போது தொண்டர்கள் உற்சாகம் அடைவார்கள். அத்திவரதர் வந்து எப்படி பெரிய பிரபலம் ஆனதோ, தமிழக அரசியலில் விஜயகாந்தின் வருகையின் போது அதேபோல் பெரிய பரபரப்பு திருப்பங்கள் நடக்கும். நாட்டிற்கு ஒரு நல்ல தலைவர் தேவை. 2021ல் தேமுதிக அந்த தலைவரை உருவாக்கும், என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.