குடும்பம் குடும்பமாக வந்த தொண்டர்கள்.. ஆனால், கட்சி மாநாட்டில் விஜய்யின் மனைவி, பிள்ளைகள் ஆப்சென்ட்!
சென்னை: விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு விஜய்யின் மனைவி சங்கீதா மற்றும் மகன், மகள் ஆகியோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்கள் யாருமே வரவில்லை. விஜய்யின் பெற்றோர் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
நடிகர் விஜய், 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். சங்கீதா சினிமா துறையைச் சார்ந்தவர் இல்லை என்றாலும் விஜய்யின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார். விஜய்யின் பட நிகழ்ச்சி என எதுவாக இருந்தாலும் விஜய்யுடன் சங்கீதா வந்துவிடுவார்.

ஆனால், நடிகர் விஜய்யின் சினிமா சார்ந்த எந்த விழாக்களிலும், கடந்த சில வருடங்களாகவே அவரது மனைவி சங்கீதா மற்றும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், மகள் திவ்யா சாஷா உள்ளிட்டோர் பங்கேற்பதில்லை. இது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்து வந்தன.
விஜய்யின் மனைவி சங்கீதா தனது மகன் மற்றும் மகளுடன் வெளிநாட்டில் வசித்து வருகிறார், அதனால் தான் விஜய்யுடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க வர முடியவில்லை என்றெல்லாம் செய்திகள் வெளியாகின. மாறுபட்ட சில தகவல்களும் வெளியாகி வந்தன.
இந்நிலையில், புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள விஜய்யின் முதல் மாநாட்டில் அவர்கள் பங்கேற்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற தவெக மாநாட்டிற்கும் விஜய்யின் மனைவி சங்கீதாவோ, விஜய்யின் பிள்ளைகளோ யாரும் வரவில்லை.
அண்மையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம் மறைவுக்கு, சங்கீதா சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். ஆனால், சங்கீதா இன்று விஜய்யின் அரசியல் மாநாட்டுக்கு வராதது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதேசமயம், இந்த மாநாட்டுக்கு விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ சந்திரசேகர் - ஷோபா சந்திரசேகர் ஆகியோர் வந்திருந்தனர். விஜய்யை பேச அழைத்ததும், மேடையில் இருந்து கீழே இறங்கிய விஜய், தனது தாய் தந்தை இருந்த இடத்திற்கு சென்று அவர்களிடம் ஆசி பெற்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications