ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல்.. விருதுநகர் கூட்டு பாலியல் கொடுமை.. கொந்தளித்த சீமான்
சென்னை: விருதுநகரில் பட்டியலின இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி இருக்கிறார்.
விருதுநகரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயது பட்டியலின இளம்பெண்ணை திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருவர், பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் திமுக இளைஞரணியை சேர்ந்த ஹரிஹரன் காதலிப்பதுபோல் நடித்து தனிமையில் இருந்தபோது அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, தனது நண்பர்கள் உட்பட மொத்தம் 8 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார்.

உதவுவதாக கூறி பலாத்காரம்
தனக்கு உதவுவதாக கூறிய மாடசாமி என்பவரும் வீடியோவை பெற்றுக்கொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக அந்த பெண் காவல்நிலையத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகி ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவிலிருந்து நீக்கம்
இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஜூனைத் அகமதை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் இளம்பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்க்கையை சீரழித்ததற்கு திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
இதற்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.

சீமான் அறிக்கை
இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "விருதுநகரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை மிரட்டி, கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட கொடுஞ்செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அண்மைக்காலத்தில் பெண்களுக்கெதிராகத் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு வரும் பாலியல் வன்முறைகளும், அத்துமீறல்களும் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தானப் பெருங்கவலையைத் தருகின்றன.

மனிதத்தன்மை இல்லாத செயல்
அத்தங்கைக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதிக்கு எனது கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவுசெய்கிறேன். மனிதத்தன்மையே துளியுமற்று, இதுபோன்ற ஈவிரக்கமற்ற கோரச்செயல்களில் ஈடுபடுவர்கள் எவராயினும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.

குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்
ஆகவே, இவ்விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனையை உறுதிப்படுத்த தேவையான சட்டரீதியான நடவடிக்கைகளை சமரசமற்றுச் செய்ய வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட அத்தங்கைக்கு உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சிகிச்சையளித்து, அவர் பாதிப்பிலிருந்து மீண்டெழுந்து வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்து, கைதூக்கிவிட வேண்டுமென தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications