பெண் ஐபிஎஸ் அதிகாரி பாலியல் புகார்: விசாகா கமிட்டி அமைத்து அரசு உத்தரவு
சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரி அளித்த பாலியல் புகாரை விசாரிக்க தமிழக அரசு விசாகா கமிட்டி அமைத்துள்ளது.
தமிழக முதல்வர் பாதுகாப்பு பணியின்போது, தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக, மூத்த ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் குறித்து, பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் உள்துறைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார்.
புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் செய்த நேரத்தில் இந்த பாலியல் தொல்லை நேர்ந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த புகார் குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "முதல்வர் சுற்றுப் பயணத்திற்குப் பாதுகாப்புக்குச் செல்லும்போதே, பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் தைரியத்தை சிறப்பு டிஜிபியே பெற்றிருப்பது அசிங்கத்தின் உச்சபட்சம், ஆணவத்தின் வெளிப்பாடு. சம்பந்தப்பட்ட அதிகாரியை சஸ்பெண்ட் செய்து வழக்குத் தொடராமல் பாதுகாக்க நினைத்தால் திமுக மாபெரும் போராட்டத்தில் இறங்கும்" என்று எச்சரித்துள்ளார்.
திமுக எம்.பி.கனிமொழி, "ஒரு பெண் IPS அதிகாரி தனது உயர் அதிகாரியால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதை கண்டுகொள்ளாத முதலமைச்சர் சாதாரண பெண்களுக்கான பாதுகாப்பை எப்படி உறுதி செய்வார்?" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில், சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை விசாரிக்க, விசாகா
கமிட்டி குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்காக, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழுவில், சீமா அகர்வால் ஐபிஎஸ், அ.அருண் ஐபிஎஸ், ப.சாமுண்டீஸ்வரி ஐபிஎஸ், வி.கே.ரமேஷ் பாபு, லொரேட்டா ஜோனா ஆகிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய தமிழக அரசின் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். பெண் எஸ்பியின் புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.