விசாகபட்டினம் வழியாக, தடையை மீறி விவி மினரல்ஸ் சட்ட விரோத தாது ஏற்றுமதி.. வருமான வரித்துறை பகீர்
சென்னை: தடையை மீறி விவி மினரல்ஸ் நிறுவனம் தாது மணலை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை கீரைக்காரன்தட்டு என்ற பகுதியை தலைமையிடமாக கொண்டு செயல்படுவது விவி மினரல்ஸ். இதன் தலைவர், வைகுண்டராஜன்.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் அள்ளி, அதிலிருந்து தாதுக்களைப் பிரித்து எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பல லட்சம் கோடிகளை சம்பாதித்து வந்தது இந்த நிறுவனம்.

குடிக்க தண்ணீர் இல்லை
ஆனால் அம்மாவட்ட கரையோரப் பகுதி மக்கள் இதனால் பெரும் பாதிப்பை அடைகிறார்கள். உப்பு நீர் நிலத்தடியில் புகுந்ததால் மக்கள் குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு குடிநீருக்காக அலைகிறார்கள். தாது மணல் பிரித்தெடுக்கும் காரணத்தினால் அப்பகுதியில் கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டு பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நாட்டு பாதுகாப்பு
இயற்கை வளங்களை அழிப்பது ஒரு பக்கம் என்றால், தாதுக்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலமாக நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழுவை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

சட்ட விரோதமாக மணல் அள்ளியுள்ளனர்
இந்த விசாரணையின் இறுதியில் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணல் அள்ளுவதற்கு விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு 2013ம் ஆண்டில் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் சம்பாதித்த பணத்தை கொண்டு ஊடகத்துறை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் விவி மினரல்ஸ் அதிபர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. சில இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு கொண்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருமான வரித்துறை ரெய்டு
இந்த நிலையில்தான், நேற்று முதல், வருமான வரித்துறை அதிகாரிகள் வைகுண்டராஜன் வீடு அவரது மகன் வீடு, அலுவலகங்கள், விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்கள், என, தமிழகம், ஆந்திரா உட்பட நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.

விசாகபட்டினம்
இது குறித்து வருமானவரித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், "ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாகுளம் பகுதிக்கு தாது மணல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து தாதுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு, விசாகப்பட்டினம் துறைமுகம் வழியாக பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இலங்கை நாட்டிலும் மணலிலிருந்து தாதுக்களைப் பிரித்தெடுக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.

தடை மீறல்
2013ஆம் ஆண்டு விவி மினரல்ஸ், தாது மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், தடையையும் மீறி ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் வெளிநாட்டு பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்". இவ்வாறு வருமானவரித்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. வைகுண்டராஜனின் சகோதரர் சுகுமார் பிஎம்சி என்ற பெயரில் தாதுமணல் ஏற்றுமதி செய்யும் ஆலையை நடத்தி வருகிறார். அதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications