வக்பு மசோதா சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் திமுக! அறிவித்த ஸ்டாலின்
சென்னை: நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு தொடர்ந்து போராடும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
வக்பு மசோதா நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சட்டசபைக்கு கருப்பு சின்னம் அணிந்து வந்தனர்.
நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று சர்ச்சைக்குரிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நேற்று பகல் 12 மணி முதல் இரவு 12 மணியை கடந்தும் இந்த விவாதம் நடந்தது. அதிகாலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று தமிழக சட்டசபைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள், திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் அனைவரும், லோக்சபாவில் வக்பு மசோதா நிறைவேற்றத்துக்கு எதிராக கறுப்பு பேட்ஜ் அணிந்து சபைக்கு வந்தனர்.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியதும் முதல்வர் ஸ்டாலின் எழுந்து பேரவை விதி110-ன் கீழ் பேசியதாவது: கடந்த மார்ச் 27-ந் தேதியன்று இந்த சபையில் நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம். இந்திய திருநாட்டின் மதநல்லிணக்கத்துக்கும் சிறுபான்மை இன இஸ்லாமிய சமுதாய மக்களுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தினை திருத்துவதற்கு லோக்சபாவில் அறிமுகம் செய்துள்ள வக்பு சட்ட முன்வடிவினை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் பாஜக நீங்கலாக, அனைத்து கட்சிகளாலும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான அரசியல் கட்சிகளால், இந்த வக்பு சட்ட திருத்தம் எதிர்க்கப்பட்டது. இவை அனைத்தையும் மீறி நாடாளுமன்ற லோக்சபாவில் வக்பு சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது.
வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக 232 எம்பிக்களும் ஆதரவாக 288 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர். இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இதை எதிர்த்து வாக்களித்தவர்கள் எண்ணிக்கை, 232 என்பது சாதாரணமானது அல்ல. எண்ணிக்கை வேண்டுமானால் கூடுதலாக இருக்கலாம். இந்த சட்ட திருத்தம் எதிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல.; முழுமையாகவே திரும்பப் பெற வேண்டியது என்பதுதான் நம் கருத்து. அதைத்தான் நாம் தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி இருந்தோம்.
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை கட்சிகளின் எதிர்ப்பை மீறி, ஒருசில கூட்டணி கட்சிகளின் தயவால் அதிகாலை 2 மணியளவில் இத்தகைய சட்டத்தை நிறைவேற்றியிருப்பது, இந்திய அரசியல் கட்டமைப்பின் மீது செய்யப்பட்ட தாக்குதல்- மதநல்லிணக்கத்தைக் குலைக்கும் செயல். இதை உணர்த்தும் வகையில் கறுப்பு சின்னம் அணிந்து இன்று சட்டசபை நடவடிக்கைகளில் நாங்கள் பங்கெடுக்கிறோம். சர்ச்சைக்குரிய இந்த சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்பதையும் இந்த மாமன்றத்தில் தெரிவித்து கொள்கிறேன்.
வக்பு வாரியத்தின் தன்னாட்சியை அழித்து சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு போராடும்- போராடும்- போராடும்- வெற்றியும் பெறும். அரசியல் அமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை சட்டப்பூர்வமாக தடுப்போம் என்று இந்த மாமன்றத்தில் உறுதி அளிக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications